சென்னை ஜெயில்ல படிக்க நிறைய புக் இருக்கு.. அங்கே மாத்துங்க.. சுப்ரீம் கோர்ட்டில் சவுக்கு சங்கர் மனு!
டெல்லி: யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரிய மனு மற்றும் அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனுக்களின் விசாரணையை செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சிறைக்கு மாற்ற வேண்டும் என சவுக்கு சங்கர் வைத்த கோரிக்கை தொடர்பாகவும் அன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சுப்ரீம் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகள் குறித்து தெரிவித்த கருத்துகள் பெரிய அளவில் சர்ச்சைக்கு உள்ளாகின. பெண் காவலர்களையும், காவல்துறை பெண் அதிகாரிகளையும் அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கஞ்சா வைத்திருந்ததாகவும் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், சவுக்கு சங்கர் மீது கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பி, தமிழக அரசுக்கு எதிராக போராடத் தூண்டியதாக சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே மாதம் உத்தரவிட்டார். இந்நிலையில் சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து கடந்த ஆகஸ்ட் 9 ஆம் தேதி உத்தரவிட்டது. மேலும், வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் தேவையில்லை என்றால் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார்.
தனது மகன் மீது மீண்டும் பதிவு செய்யப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதன் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
சவுக்கு சங்கர் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளை ரத்து செய்யக்கோரியும் இரண்டாவது முறையாக மீண்டும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் தன்னை சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தன.
இதையடுத்து வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரிய மனு மற்றும், சவுக்கு சங்கர் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரிய மனுக்கள் மீதான விசாரணையை வரும் திங்கட்கிழமை செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
அப்போது, மதுரையில் இருந்து என்னை சென்னை சிறைக்கு மீண்டும் மாற்ற வேண்டும். சென்னை சிறையில் படிப்பதற்கு போதுமான புத்தகங்கள் இருப்பதால் அதனை மனதில் கொண்டாவது என்னை மீண்டும் மதுரை சிறையில் இருந்து சென்னை சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை சவுக்கு சங்கர் தரப்பில் வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கை தொடர்பாகவும் செப்டம்பர் 9 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications