முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு
டெல்லி : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நாளை காலை 10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில், ஓராண்டாக சிறையில் இருந்து வருகிறார்.
தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் உள்ள செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை ஐகோர்டும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கை பொறுத்த வரை உச்ச நீதிமன்றம் முக்கியமான கேள்விகளை எழுப்பி இருந்தது. இதன்படி போக்குவரத்துத் துறையில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு தாக்கல் செய்த மூன்று வழக்குகளையும் தொடர்ந்து அமலாக்கத்துறை விசாரிக்கப் போகிறதா மற்றும் 1,000-க்கும் மேற்பட்டோர் குற்றம் சாட்டப்பட்ட வழக்கைத் தவிர்த்துவிட்டு செந்தில் பாலாஜி தொடர்புடைய வழக்கை விசாரிக்கப் போகிறதா என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்" எனக் கேள்வி எழுப்பி இருந்தது.

இதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "இந்த வழக்கில் மொத்தம் 47 நபர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 100க்கும் மேற்பட்டவர்கள் சாட்சியங்களாக இருக்கிறார்கள். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையை பார்க்கும் போது, காவல்துறை, தமிழக அரசு மற்றும் போக்குவரத்துதுறை என்று பல பிரிவுகளிலும் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பெறப்பட்டிருக்கிறது. எனவே முக்கிய குற்றப்பத்திரிகை குறித்து தனித்தனியாக விசாரிக்கலாம் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும் செந்தில் பாலாஜி சாட்சியங்களை கலைக்கிறார் என்பதற்கு எங்களிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன" என்று கூறினார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும், ஏனென்றால் அதுபோன்று வழக்கை தனித்தனியாக விசாரிக்க முடியாது என்றும் அதற்கான முகாந்திரமும் இல்லை என்றும் தெரிவித்தனர். அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் சங்கர், "ஒரே வழக்கை தனித்தனியான சாராம்சங்களாக பிரித்து விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிடுகிறது. இது சட்ட விதிகளுக்கு எதிரானது" என்று கூறினார். இதையடுத்து அனைத்து தரப்பின் வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்கள்.
இந்நிலையில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த வழக்கின் விசாரணை முடிந்து ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு நாளை வருகிறது. நாளை காலை 10.30 மணிக்கு செந்தில் பாலாஜி ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. எனவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது நாளை காலை தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications