'விவாகரத்து வழக்கு நிலுவையின் போது'.. பெண்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரப்பிரசாதம்
டெல்லி: விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது புகுந்த வீட்டில் பெற்றது போன்ற வசதிகளை மனைவி பெற உரிமை இருக்கிறது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்திருக்கிறது. கேரளாவை சேர்ந்த இதய மருத்துவர்,சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்துள்ளார். அந்த பெண் மாதம் இரண்டரை லட்சம் ஜீவனாம்சம் கேட்ட வழக்கில் தான் இந்த தீர்ப்பு வந்துள்ளது.
கேரளாவை சேர்ந்த ஒரு இதய மருத்துவர் ஒருவர் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னையை சேர்ந்த ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்திருக்கிறார். அவருக்கு முதல் திருமணம் மூலம் ஒரு மகன் உள்ளார். எனினும் 2-வது திருமணத்திலும் பிரச்சினைகள் எழுந்ததால், கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 19-ந் தேதி அவர் இந்திய விவாகரத்து சட்டப்படி விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார்.

அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அவருடைய மனைவி, மாதம் ரூ.2½ லட்சம் ஜீவனாம்சம் மற்றும் வழக்கு செலவு ரூ.2 லட்சம் கேட்டு, சென்னையில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதை விசாரித்த குடும்பநல நீதிமன்றம், மனைவிக்கு மாதம் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் இடைக்கால ஜீவனாம்சம் அளிக்குமாறு கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 14-ந் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த ஜீவனாம்ச உத்தரவை எதிர்த்து , இதய மருத்துவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து இடைக்கால ஜீவனாம்சத்தை ரூ.80 ஆயிரமாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 1-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, அவருடைய மனைவி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
விசாரணை முடிவடைந்த நிலையில், உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் விக்ரம் நாத், பி.பி.வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று தீர்ப்பளித்தது.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறுகையில், கணவரின் வருவாய் குறித்த சில அம்சங்களை சென்னை உயர்நீதிமன்றம் பார்க்க தவறி விட்டது. குடும்பநல கோர்ட் மட்டுமே பார்த்திருக்கிறது. கணவருக்கு நிறைய சொத்துகள் உள்ளன. ஒரு பள்ளியும் இருக்கிறது. அவருடைய தந்தை இறந்து விட்டநிலையில், ஒரே சட்டப்பூர்வ வாரிசு, அவர்தான். அந்த சொத்துகள் மற்றும் அவரது தனிப்பட்ட சொத்துகளில் இருந்து அவருக்கு ஏராளமான வருமானம் வருகிறது.
ஆனால், மனைவி வேலை பார்க்கவில்லை. திருமணத்துக்கு பிறகு வேலையை தியாகம் செய்து விட்டார். அவர் புகுந்த வீட்டில் சில வசதிகளுக்கு பழகி விட்டார். விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதே வசதிகளை பெற அவருக்கு உரிமை இருக்கிறது. கணவரைப்போல் வசதிகள் அனுபவிக்கும் உரிமையை மனைவிக்கு மறுக்கக்கூடாது என்று குடும்பநல கோர்ட்டும் கூறியுள்ளது. அந்த தீர்ப்பை உறுதி செய்கிறோம். மனைவிக்கு இடைக்கால ஜீவனாம்சமாக ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் வழங்கப்பட வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது" இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications