சுஷ்மா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம்.. பாக். மீதான தாக்குதல் குறித்து விளக்கம்
டெல்லி: பயங்கரவாதிகள் மீது விமானத் தாக்குதல் நடத்தியது பற்றி விளக்கம் அளிக்க அனைத்துக் கட்சி கூட்டம் டெல்லியில் துவங்கியது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் இந்த கூட்டம் தற்போது நடந்து வருகிறது.
இன்று விடிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களின் மீது இந்திய விமானப்படை மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.
இப்படி தாக்குதலை நடத்துவதற்காக 1000 கிலோ அளவுள்ள வெடிகுண்டுகள் மற்றும் 12 மிராஜ் ரக போர் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தகர்க்கப்பட்டன
பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்தே மொத்தம் 4 இடங்களில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு அவை சுக்குநூறாக தகர்க்கப்பட்டன.
300 பேர்
இதில் பயங்கரவாதிகள், மற்றும் அவர்களின் தலைவர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று வெளியுறவு துறை சார்பாக தெரிவிக்கப்பட்டது.
குடியரசு தலைவர்
இதையடுத்து, பாதுகாப்பு விவகாரங்களுக்காக மத்திய அமைச்சரவை குழு பிரதமர் மோடி தலைமையில் கூடியது. அப்போது விமான படை தாக்குதல் நடைபெற்றது தொடர்பாக குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவரிடம் பிரதமர் மோடி விளக்கம் அளித்தார். தொடர்ந்து இந்திய பாதுகாப்பு குறித்த ஆலோசனையும் நடைபெற்றது.
சுஷ்மா சுவராஜ்
இதனிடையே விமான தாக்குதல் சம்பந்தமான விளக்கத்தை அளிக்க வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் முடிவு செய்தார். அதற்காக டெல்லியில் மாலை 5 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்துக்கும் இன்று அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி தற்போது கூட்டம் கூடியுள்ளது.
விளக்கம்
இதில், தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு சுஷ்மா விளக்கம் அளித்து வருகிறார். இதனை தொடர்ந்து இந்திய பாதுகாப்பு குறித்த அனைத்து விஷயங்களும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.