அடித்து தூள்கிளப்பும் கெஜ்ரிவால் அரசு..ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு வேக்சின்.. புதிய மாபெரும் சாதனை
டெல்லி: முன்னெப்போதும் இல்லாத வகையில் தலைநகர் டெல்லியில் நேற்று மட்டும் 2.05 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.
கொரோனா 2ஆம் அலை நாட்டில் ஏற்பட்ட மோதும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்று தலைநகர் டெல்லி. அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளும் கொரோனா நோயாளிகளால் நிரம்பின.
அதேபோல ஆக்சிஜன் தேவையும் அதிகரிக்க, மிகப் பெரிய சிக்கலைத் தலைநகர் எதிர்கொண்டது. தற்போது அங்கு வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துவிட்டது.

2.05 லட்சம் பேருக்கு வேக்சின்
இதையடுத்து வேக்சின் போடும் பணிகளை ஆம் ஆத்மி அரசு தீவிரப்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் டெல்லியில் 2.05 லட்சம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தனது ட்விட்டர் பக்கத்தில், "டெல்லியில் அதிவேகமாக வேக்சின் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 3 நாட்களில் தினசரி 1.5 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது.

45 லட்சம் வேக்சின் தேவை
சனிக்கிழமை முந்தை அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் வகையில் 2,05,170 பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எங்கள் அரசு கொரோனா 3ஆம் அலையில் இருந்து டெல்லியை இப்படி தான் காப்பாற்றப் போகிறது" எனப் பதிவிட்டுள்ளார். மிக வேகமாக வேக்சின் பணிகளை மேற்கொண்டு வருவதால் அதற்கேற்ப டெல்லிக்கு வரும் ஜூலை மாதம் 45 லட்சம் கொரோனா வேக்சின்களை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என ஆம் ஆத்மி எம்எல்ஏ அதிஷி வலியுறுத்தியுள்ளார்.

தலைநகர் டெல்லி
தலைநகர் டெல்லியில் சனிக்கிழமை வரை மொத்தம் 73 லட்சம் பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. அவர்களில் 56 லட்சம் பேருக்கு வேக்சின் முதல் டோசும் 17 லட்சம் பேருக்கு வேக்சின் 2ஆம் டோசும் போடப்பட்டுள்ளது. அங்கு 18-44 வயதுடையவர்களுக்கு 31 லட்சம் பேருக்கும் 45-60 வயதுடைய 16 லட்சம் பேருக்கும் வேக்சின் போடப்பட்டுள்ளது. இதற்காகவே அங்கு மொத்தம் 1320 தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.

மத்திய அரசு
கடந்த வெள்ளிக்கிழமை 58 ஆயிரம் கோவாக்சின் மற்றும் 53 ஆயிரம் கோவிஷீல்டு டோஸ்களை டெல்லிக்கு அனுப்பப்பட்டன. தற்போது 8.39 லட்சம் டோஸ்கள் கையிருப்பில் உள்ளதாகவும் இதை வைத்துக் கொண்டு ஐந்து நாட்களுக்கு வேக்சின் போடும் பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. மேலும், விரைவாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தக் கூடுதல் வேக்சின்களையும் அனுப்புமாறு டெல்லி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

கொரோனா வேக்சின்
கொரோனா பரவலுக்கு எதிராகத் தடுப்பூசிகள் மட்டுமே ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. நாட்டில் டெல்டா பிளஸ் கொரோனா வேகமாகப் பரவ தொடங்கியுள்ளது. இதனால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பூசிகள் தடுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக மக்களுக்கு வேக்சின் 2 டோஸ்களையும் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications