கொரோனா தடுப்பூசியை போட 69% இந்தியர்கள் தயக்கம்..ஆய்வில் அதிர்ச்சி தகவல்..என்ன காரணம் தெரியுமா?
டெல்லி: நாட்டில் 69 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்வதில் தயக்கம் காட்டுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
55 சதவீத சுகாதார வல்லுநர்களும் கொரோனா தடுப்பூசியை உடனடியாகப் பெறுவதில் தயக்கம் காட்டுகிறார்கள், 26 சதவீத பெற்றோர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒப்புதல் அளிக்கிறார்கள் எனவும் ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகள், சோதனைகளின் செயல்திறன் ஆகியவையே பொதுமக்கள் தடுப்பூசியை எடுக்க தயங்குவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளன.

ஆட்டிப்படைக்கும் கொரோனா
உலகம் முழுவதும் ஆட்டிப்படைத்து வரும் கொடிய கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளன. இந்தியாவிலும் 2 தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசி மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசி ஆகிய 2 தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டிற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) கடந்த வாரம் பச்சைக்கொடி காட்டியது.

ஆய்வில் அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் இந்த 2 தடுப்பூசிகளை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு மருத்துவ நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தியாவில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக உள்ளார்களா? என்பது குறித்து ஆன்லைன் தளமான லோக்கல் சர்க்கிள்ஸின் நிறுவனம் சமீபத்தில் கணெக்கெடுப்பு நடத்தியது.

69 சதவீதம் பேர் தயக்கம்
அதில் நாட்டில் 69 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி எடுக்க அவசரப்படவில்லை என்று அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. தடுப்பூசிகள் பொதுமக்கள் பார்வையில் எப்படி உள்ளது? அவர்கள் தடுப்பூசி எடுத்து கொள்ள தயாராக இருக்கிறார்களா? இல்லை தயக்கம் காட்டுகிறார்களா? என அக்டோபர் மாதம் முதல் பொதுமக்களிடம் லோக்கல் சர்க்கிள்ஸின் நிறுவனம் கனெக்கெடுப்பு நடத்தியது.

26 சதவீதம் பேர் மட்டுமே கிரீன் சிக்னல்
அக்டோபர் தொடக்கத்தில் இந்தியாவில் முதல் கொரோனா தடுப்பூசி இப்போது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை எடுத்துக்கொள்வதில் உங்கள் அணுகுமுறை என்னவாக இருக்கும்? என்று 8,723 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் 26 சதவீத பேர் மட்டுமே தடுப்பூசி கிடைத்தவுடன் அதைப் போடுவோம் என்று கூறியுள்ளனர்.

அக்டோபர் முதல் கணக்கெடுப்பு
அக்டோபரில் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி, கொரோனா தடுப்பூசி எடுக்க தயங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 61 சதவீதமாக இருந்தது. தடுப்பூசி தயாரிப்பாளர்களான ஃபைசர் மற்றும் மாடர்னா செயல்திறன் முடிவுகளில் வெற்றியை அறிவித்ததால், நவம்பர் கணக்கெடுப்பில் தடுப்பூசி எடுக்க தயங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 59 சதவீதமாகக் குறைந்தது.

மக்கள் மனநிலை மாறவில்லை
இந்த நிலையில் கோவாக்சின், கோவிஷீல்ட் சீரம் தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் லோக்கல் சர்க்கிள்ஸின் டிசம்பரில் நடத்திய ஒரு ஆய்வில், தடுப்பூசி எடுக்க தயங்கிய மக்களின் 59 சதவீதத்தில் இருந்து 69 சதவீதமாக அதிரடியாக அதிகரித்துள்ளது. ஜனவரி மாதத்திற்கு இடையில் லோக்கல் சர்க்கிள்ஸ் நடத்திய ஆய்வில் தடுப்பூசி எடுக்க தயங்கிய மக்களின் விகிதம் 69 சதவீதம் பேர் என அப்படியே மாறாமல் உள்ளது.

26% பெற்றோர்களே ஆதரவு
கொரோனா தடுப்பூசி பள்ளி குழந்தைகளுக்குக் கிடைத்தால், அதை உங்கள் குழந்தை அல்லது பேரக்குழந்தைக்குக் கொடுப்பது குறித்து நீங்கள் கருதுகிறீர்களா?" என்று கேட்டபோது, ஏப்ரல் 2021 க்குள் தடுப்பூசி கிடைத்தால் 26 சதவீத பெற்றோர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஒப்புதல் அளித்தனர். மீதம் உள்ள பெற்றோர்கள் தயக்கம் காட்டியுள்ளனர்.

சுகாதார வல்லுநர்களும் எதிர்ப்பு
இதேபோல் டிசம்பரில் நடத்திய மற்றொரு ஆய்வில் 55 சதவீத சுகாதார வல்லுநர்களும் கொரோனா தடுப்பூசியை உடனடியாகப் பெறுவதில் தயக்கம் காட்டுகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. பெரும்பாலான சுகாதார வல்லுநர்கள் இதன் பக்கவிளைவுகளைப் பற்றி கவலைப்படுகிறார்கள் அல்லது அதன் செயல்திறனைப் பற்றி உறுதியாக தெரியவில்லை என்று கூறியுள்ளனர். இவர்களில் சுமார் 60 சதவீதம் பேர் கொரோனாவுக்கு எதிராக பணிபுரிந்தது குறிப்படத்தக்கது.

காரணம் என்ன?
கொரோனா தடுப்பூசி பக்கவிளைவுகள், சோதனைகளின் செயல்திறன், இந்த தடுப்பூசிகள் குறித்து போதிய தெளிவின்மை ஆகியவையே பொதுமக்கள் தடுப்பூசியை எடுக்க தயங்குவதற்கான முக்கிய காரணங்கள் என ஆய்வில் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications