உச்சத்தில் கொரோனா.. தாஜ்மஹாலை ஒரு மாதம் மூட உத்தரவு.. நாட்டிலுள்ள அனைத்து நினைவு சின்னங்களும் மூடல்
டெல்லி: நாட்டில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், தாஜ்மஹால் உள்ளிட்ட நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு நாட்டில் இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளது.
இதனால் மத்திய அரசு ஊரடங்கு தளர்வுகளில் மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன.

தாஜ்மஹாலை மூட உத்தரவு
இந்நிலையில், கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால் அடுத்து ஒரு மாதத்திற்கு உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலை மூட மத்திய கலாசார துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தாஜ்மஹால் மட்டுமின்றி ஆக்ரா கோட்டை உட்பட நாட்டில் தொல்பொருள் ஆய்வு மையத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அனைத்து நினைவுச் சின்னங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

எவ்வளவு காலம்
தற்போது, ஒரு மாதம் அதாவது மே 15ஆம் தேதி வரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நினைவுச் சின்னங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது, இருப்பினும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில் இந்தக் காலம் நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

188 நாட்கள்
முன்னதாக கடந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக மார்ச் 17ஆம் தேதி முதல் தாஜ்மஹால் மூடப்பட்டது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சுமார் 188 நாட்கள் கொரோனா பாதிப்பு காரணமாக தாஜ்மஹால் மூடப்பட்டது. அதன் பின்னர் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தாஜ்மஹாலை சுற்றிப் பார்க்கப் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

சுற்றுலாப் பயணிகள்
முதலில் சுற்றுலாப் பயணிகள் தயக்கம் காட்டினாலும், மெல்ல தாஜ்மஹாலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை உயர்ந்தது. ஒரு கட்டத்தில் தினமும் தாஜ்மஹாலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை எட்டியது. இருப்பினும், கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்ததால் கடந்த சில தினங்களாகவே சுற்றுலாப் பயணிகளின் வருகை மீண்டும் குறைந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications