நாடு முழுவதும் 11 மாநிலங்களில் 56,611 பள்ளிகளில் தமிழ் பாடம்! அன்புமணி வினாவுக்கு மத்திய அரசு பதில்!
டெல்லி: நாடு முழுவதும் 11 மாநிலங்களில் 56,611 பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடம் கற்பிக்கப்படுவதாக அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும் 55,356 பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படும் தகவலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான விவரம் வருமாறு;

11 மாநிலங்களில்
தமிழ்நாட்டையும் சேர்த்து இந்தியாவில் மொத்தம் 11 மாநிலங்களில் 56,611 பள்ளிகளில் தமிழ் மொழிப்பாடம் கற்பிக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. உறுப்பினர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் எழுப்பிய வினாவுக்கு மத்திய கல்வித்துறை இணையமைச்சர் அன்னப்பூர்ணா தேவி எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

56,611 பள்ளிகளில்
தமிழ்நாட்டில் 55,356 பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு வெளியில் அதிகபட்சமாக புதுச்சேரியில் 666 பள்ளிகளிலும், கேரளத்தில் 254 பள்ளிகளிலும், கர்நாடகத்தில் 132 பள்ளிகளிலும், ஆந்திரத்தில் 108 பள்ளிகளிலும் தமிழ் மொழிப்பாடமாக கற்பிக்கப்படுகிறது. மராட்டியத்தில் 49, அந்தமான் நிகோபர் தீவுகளில் 21, தெலுங்கானாவில் 12, தில்லியில் 11, குஜராத் மற்றும் சண்டிகரில் தலா 1 பள்ளியிலும் தமிழ் மொழி கற்றுத்தரப்படுகிறது.

தமிழ் இருக்கைகள்
இந்தியாவில் உள்ள எந்த பல்கலைக்கழகத்திலும் பல்கலைக்கழக மானியக்குழுவின் சார்பில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படவில்லை. அதே நேரத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காக சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கி செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்த மத்திய அமைச்சர் அன்னப்பூர்ணா தேவி, அந்த அமைப்புக்கு கடந்த 5 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியின் விவரங்களையும் வெளியிட்டார்.

முக்கியத் தகவல்
அன்புமணி ராமதாஸ் மூலம் மத்திய அரசிடம் இருந்து வெளிவந்திருக்கக் கூடிய மேற்கண்ட இந்த தகவல் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. தமிழகத்திற்கு அடுத்தபடியாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் மட்டுமே தமிழ் மொழிப்பாடம் அதிக எண்ணிக்கையிலான பள்ளிகளில் கற்பிக்கப்படுவது கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.












Click it and Unblock the Notifications