திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி
டெல்லி: தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் இன்னும் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில் தான் தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டு அந்த பொறுப்பில் உள்ள டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் டெல்லியில் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகனை சந்தித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருக்கிறார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக (காவல்துறை தலைவர்)இருந்த சங்கர் ஜிவால் கடந்த 2025ம் ஆண்டு ஆகஸ்ட் 31ம் தேதி பணி ஓய்வு பெற்றார். அதன்பிறகு நிரந்தரமாக சட்டம் ஒழுங்கு டிஜிபி நியமனம் செய்யப்படவில்லை. தமிழக அரசு சார்பில் நிர்வாக பிரிவு டிஜிபி வெங்கடராமன் சட்டம் ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக இருந்தார்.

அதன்பிறகு சட்டசபை தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் சட்டம் - ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்தது. தேர்தல் முடிவடைந்த பிறகும் சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியாக தொடர்ந்தார். இந்நிலையில் தான் புதிய டிஜிபியாக மமேஷ் குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு மே 29 ம் தேதி வெளியானது.
மகேஷ் குமார் அகர்வால் தற்போது மத்திய அரசு பணியில் உள்ளார். எல்லை பாதுகாப்பு படை கூடுதல் இயக்குநராக பணியாற்றி வரும் நிலையில் அவர் இன்னும் தமிழக டிஜிபியாக பொறுப்பேற்கவில்லை. இவர் நாளை அதிகாரப்பூர்வமாக தமிழக டிஜிபியாக பொறுப்பேற்கலாம் என்று கூறப்படுகிறது. அவரிடம் முறைப்படி தற்போதைய டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்புகளை வழங்க உள்ளார்.
இந்நிலையில் தான் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் இன்று டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர் மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகனை சந்தித்து பேசி உள்ளார். அதன்பிறகு அவர் இன்னும் சற்று நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்ற தகவல் வெளியாகி உள்ளது. சந்தீப் ராய் ரத்தோர் நாளை டிஜிபி பதவியில் இருந்து அவர் விலக உள்ள நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications