நாடாளுமன்றத்தில் பெஞ்சல் புயல் பாதிப்பு- ரூ2,000 கோடி நிவாரணம்- டிஆர் பாலு, கனிமொழி, வைகோ 'வாய்ஸ்'
டெல்லி: தமிழ்நாட்டின் பெஞ்சல் புயல் பாதிப்பு, உ.பி. சம்பல் வன்முறை பாதிப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் இன்று வெளிநடப்பு செய்தன. நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி, ராஜ்யசபாவில் வைகோ, புதுக்கோட்டை அப்துல்லா உள்ளிட்டோர் தமிழ்நாட்டின் புயல் பாதிப்பு விவரங்களைப் பட்டியலிட்டனர்.
தமிழ்நாடு மாவட்டங்கள் மிக மோசமான பேரழிவைச் சந்தித்துள்ளன. திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் தமிழ்நாட்டின் புயல் பாதிப்பு விவகாரம் எதிரொலித்தது. லோக்சபாவில் தமிழ்நாட்டின் புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும்; உ.பி. சம்பல் மசூதி வன்முறை சம்பவங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக, காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.
லோக்சபாவில் திமுக எம்பி டிஆர் பாலு பேசுகையில், பெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஆகையா மத்திய அரசு வல்லுநர் குழுவை உடனே தமிழ்நாட்டுக்கு அனுப்பி உரிய நிவாரண நிதியை வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
லோக்சபாவில் திமுக எம்பி கனிமொழியும் தமிழ்நாட்டுக்கு முதல் கட்டமாக ரூ2,000 கோடி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியள்ளதை ஏற்று மத்திய அரசு உடனே உரிய நிவாரண நிதியை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
ராஜ்யசபாவில் வைகோ பேசியதாவது: அவைத் தலைவர் அவர்களே, ஃபெஞ்சல் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியைத் தாக்கியதால், தமிழகத்தில் விமானம் மற்றும் இரயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ததால், வெள்ளம் சூழ்ந்து, பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன. குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ததால் பொதுமக்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் வெள்ளம் மற்றும் மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். மற்ற மாவட்டங்களில் மின்சாரம் தாக்கி சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை, ஆனால் அவர்களின் படகுகளும், மீன்பிடி வலைகளும் சூறாவளி காற்றால் சேதமடைந்தருக்கின்றன. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால், பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. விளைந்த பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. காய்கறி மற்றும் பழங்களை சந்தைப்படுத்த முடியாமல் விளைபொருட்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகளில் மழை நீர் புகுந்ததால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மீட்பு நடவடிக்கைகளுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரின் உதவியை நாடியுள்ளோம்.
மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பொருட்களை விரைந்து வழங்கவும், சேதங்களை மதிப்பீடு செய்யவும் ஆய்வுக் குழுவை அனுப்பி, பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வுக்காக தமிழக அரசுக்கு போதிய நிதி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ராஜ்யசபாவில் வைகோ பேசினார். இதேபோல திமுக எம்பி புதுக்கோட்டை அப்துல்லாவில் ராஜ்யசபாவில் தமிழ்நாட்டின் புயல் வெள்ள பாதிப்பு விவரங்கள் குறித்து விவரித்தார்.












Click it and Unblock the Notifications