ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநர் பதவியும் எதற்கு? அண்ணா சொன்னதை வழிமொழியும் அடடே ஆம் ஆத்மி!
டெல்லி: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி தொடர்பான தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நிலைப்பாடு தேசத்துக்கே ஆபத்தானது என ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சத்தா சாடியுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு முந்தைய பண மோசடி வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்துள்ளது எனக் கூறி அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது அமலாக்கப் பிரிவு. தற்போது உடல்நலன் பாதிக்கப்பட்டு செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடம் மருத்துவமனையில் வைத்தே 8 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது.

இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு பிரித்து கொடுக்கப்பட்டன. அத்துடன் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து நீடிப்பார் எனவும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது. ஆனால் இதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தரவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி, கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் அமைச்சராக இருக்கக் கூடாது என்பது ஆளுநர் ரவியின் நிலைப்பாடு. இதனை தமிழ்நாடு அரசு நிராகரித்து, செந்தில் பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என ஆணையிட்டுள்ளது.
மேலும் ஆளுநர் ரவியின் இத்தகைய நிலைப்பாடு கடும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு மாநிலங்களில் அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட போது, இலாகா இல்லாத அமைச்சர்களாக இருந்துள்ளனர். அண்மையில் டெல்லியில் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது 9 மாதங்கள், இலாகா இல்லாத அமைச்சராகத்தான் இருந்தார். பின்னரே பதவியை ராஜினாமா செய்தார். இதனை முன்வைத்தும் விவாதங்கள் நடைபெறுகின்றன.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நிலைப்பாட்டை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. அக்கட்சியின் எம்பி ராகவ் சத்தா கூறுகையில், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் முதல்வர்களின் அதிகாரங்களை ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் பறித்து கொள்கின்றனர். தமிழ்நாட்டில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்க தகுதி இல்லை என்கிறார் ஆளுநர் ரவி. நமது அரசியல் சாசனப்படி, யார் அமைச்சராக இருக்க வேண்டும் என்பதை முதல்வர் மட்டும்தான் தீர்மானிப்பார். ஆளுநர் அல்ல. ஆளுநர் ரவியின் இந்த போக்கு தேசத்துக்கே ஆபத்தானது. ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்கள் என்ற பதவியை காலி செய்வதுதான் சரியானது என்றார்.












Click it and Unblock the Notifications