டெல்லியில் தமிழக எம்பி சுதாவிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர் கைது! 4 சவரன் நகை மீட்பு
டெல்லி: டெல்லியில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த தமிழ்நாட்டை சேர்ந்த மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி எம்பி, சுதாவிடம் மர்ம நபர் செயின் பறிப்பில் ஈடுபட்டார். இதனையடுத்து செயின் பறிப்பில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்திருக்கின்றனர். அவரிடமிருந்து 4 சவரன் தங்க செயின் மீட்கப்பட்டிருக்கிறது.
நாடாளுமன்றத்தில் தற்போது மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எனவே நாடு முழுவதும் உள்ள எம்பிக்கள் தலைநகர் டெல்லியில் மையமிட்டுள்ளனர். தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்பி சுதாவும் கூட்டத்தொடரில் பங்கேற்க டெல்லி சென்றிருந்தார்.

உயர் பாதுகாப்பு கொண்ட தூதரகப் பகுதியின் மையப்பகுதியில் அவர் அதிகாலை நடை பயணம் மேற்கொண்டிருந்தபோது, திடீரென மர்ம நபர் ஒருவர் எம்பியின் செயினை பறித்து சென்றார்.
செயின் பறிப்பு சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. செயின் பறிப்பில் ஈடுபட்டவர், மோதி பாக்கிற்கு தப்பிச் சென்று, அங்கிருந்து பின்னர் சானக்யபுரிக்கு சென்றிருக்கிறார். அவரை கைது செய்த டெல்லி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தியும், அருகில் உள்ள தூதரகங்களிடமிருந்து பெறப்பட்ட காட்சிகளை ஆய்வு செய்தும் சந்தேக நபரை கண்டுபிடித்ததாக போலீஸ் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.
குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட நீல நிற ஸ்கூட்டரை போலீசார் முதலில் கண்டுபிடித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர் சானக்யபுரிக்குச் செல்வதற்கு முன், சுமார் ஒரு மணி நேரம் மோதி பாக்கில் சுற்றித் திரிந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டறியப்பட்டது. இந்தச் சம்பவம் போலந்து தூதரகத்தின் வாயில் எண் 3 மற்றும் 4 அருகே காலை 6.15 மணியளவில் நடந்தது. தனது தங்கச் சங்கிலியைப் பறித்த நபர் எதிர் திசையில் இருந்து ஸ்கூட்டரில் வந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சுதா தெரிவித்தார்.
"மெதுவாக வந்ததால், முதலில் எனக்கு சந்தேகம் வரவில்லை. ஆனால், அவர் கடந்து சென்றபோது, சங்கிலியை வேகமாகப் பிடித்து இழுத்ததில், என் உடைகள் கிழிந்து கழுத்தில் காயம் ஏற்பட்டது" என்று சுதா கூறினார். நான்கு சவரனுக்கு மேல் எடையுள்ள அந்த தங்கச் சங்கிலி மீட்கப்பட்டதாக காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications