கிராம மக்களுக்கு மட்டும் பாரபட்சமா.. இதை உடனே செய்யுங்க.. மத்திய அமைச்சரிடம், தமிழக எம்.பி.க்கள் மனு
டெல்லி: இந்தியாவில் ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டம் போட்டு வரும் கொரோனா தொற்று காரணமாக பொது போக்குவரத்து பல மாதங்கள் முடங்கியது. இதனை தொடர்ந்து சாலை போக்குவரத்து ஓரளவு சீரடைந்தது.
ஆனால் விமான போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முழுமையாக சீரடையவில்லை. நடுத்தர மக்கள் அதிகளவு பயன்படுத்தும் ரயில் போக்குவரத்தை பொறுத்தவரை எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.
பல்வேறு மாநிலங்களில் பயணிகள் ரயில்கள் இன்னும் முழுமையாக இயக்கப்படவில்லை. சிறு நகரங்களுக்கு இடையே குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுவதால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்களுக்கு பயணிகள் வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.

தமிழக எம்.பி.க்கள் மனு
பயணிகள் ரயில்களை இயக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் முன்பதில்லாத பயணிகள் ரயிலை இயக்க வேண்டும் என்றும் ரயில்களில் கூடுதல் முன்பதில்லாத பெட்டிகளை சேர்க்க வேண்டும் என்றும் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்னவ்விடம் தமிழக எம்.பிகள் சு.வெங்கடேசனும், கலாநிதி வீராச்சாமியும் மனு வழங்கியுள்ளனர்.

பயணிகள் ரயில் இயக்கப்படவில்லை
இது தொடர்பாக இருவரும் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- பெரும் தொற்று ஏற்பட்டவுடன் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தைக் காரணம் காட்டி சாதாரண பயணி வண்டிகள் ரத்து செய்யப்பட்டன. 2019 -20 இல் 3,715 சாதாரண பயணி வண்டிகள் ஓடின. விரைவு வண்டிகளும் புறநகர் வண்டிகளும் ரத்து செய்யப்பட்ட போது அவையும் ரத்து செய்யப்பட்டன. அவற்றில் 200 கிலோ மீட்டருக்கு மேல் ஓடிய 500 வண்டிகள் விரைவு வண்டிகள் ஆக மாற்றப்பட்டன. ஆனால் விரைவு வண்டிகளும் புறநகர் போக்குவரத்து ரயில்களும் அத்தியாவசிய பயணிகளுக்கும் திறந்துவிடப்பட்ட பின்னும் சாதாரண பயணி வண்டிகள் இயக்கப்படாமல் தொடர்கிறது.

கிராமங்களுக்கு வரப்பிரசாதம்
அதுமட்டுமல்ல விரைவு வண்டிகளில் பொது பெட்டிகளும் இணைக்கப்படுவது இல்லை. சாதாரண பயணி வண்டிகள் மொத்த பயணிகளில் 22 சதமானம் ஆகும். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் கிராமப்புற மக்கள் ஆகும்.கிராமங்களிலிருந்து ஒட்டிய நகரங்களுக்கு அவர்கள் அன்றாடம் தங்கள் பொருள்களை எடுத்துச்சென்று விற்பதற்கும் மாணவர்கள் நகரத்தில் படிப்பதற்கும் வேலை பார்ப்பதற்கும் நகரங்களுக்கு சென்று வர இந்த சாதாரண வண்டிகள் மிகவும் பயன்பாடு உடையனவாக இருந்தன. இவர்களுக்கு சீசன் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டதால் மிகக் குறைந்த கட்டணத்தில் சென்று வருவது கிராமப்புற மக்களுக்கு மிகவும் சாத்தியமானதாக இருந்தது.

பாதகமான செயல்
பொது முடக்கம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு விரைவு வண்டிகளும் புறநகர வண்டிகளும் ஓரளவுக்கு இயக்க ஆரம்பிக்கப்பட்ட பின்னும் சாதாரண பயணி வண்டிகள் இயக்கப்படாதது கிராமப்புற மக்களுக்கு மிகவும் பாதகமாக அமைந்துள்ளது.சமூக இடைவெளியை உருவாக்க பேருந்துகளுடன் சாதாரண பயணி வண்டிகளும் இயக்கப்பட்டால் பயணிகள் பரவலாக பயணிப்பது சாத்தியமாகும்.

கோரிக்கை
சமூக இடைவெளியும் நிறைவேறும். எனவே இந்த காரணத்துக்காக பயணி வண்டிகளை இயக்கவில்லை என்று கூறுவது ஏற்புடையதல்ல. கிராமப்புற மக்களுக்கு இது பாரபட்சம் காட்டுவதாகும். எனவே கிராமப்புற மக்களுக்கு உதவிட சாதாரண பயணி வண்டிகளை உடனே இயக்கிட வேண்டும். அத்துடன் சாதாரண மக்களுக்காக விரைவு வண்டிகளில் பொது பெட்டிகளை இணைத்து விடவும் வேண்டும் என்று அவர் ரயில்வே அமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications