பாஜக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக சிபி ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!
டெல்லி: பாஜகவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் சிபி ராதாகிருஷ்ணன், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
குடியரசு துணைத் தலைவராகப் பதவி வகித்த ஜெகதீப் தன்கர் திடீரென உடல்நிலையை காரணம் காட்டி ஜூலை 21ஆம் தேதி பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே ஜெகதீப் தன்கர் பதவியை ராஜினாமா செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டன.

இதன்பின் ஜெகதீப் தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டு, அந்த பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன்பின் குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக ஆகஸ்ட் 21ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
இதன்பின் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஆகஸ்ட் 22ஆம் தேதி நடைபெறும். எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால், செப்டம்பர் 9ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் ஆட்சி மன்றக் குழு ஆலோசனை நடத்தியது.
அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநில ஆளுநராக பணியாற்றி வரும் சிபி ராதாகிருஷ்ணன், குடியரசு துணைத் தலைவராகப் போவது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.
திருப்பூரைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன், 1998ஆம் ஆண்டு கோவை மக்களவை தொகுதியில் வென்றார். கோவையில் பாஜக வலுப்பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சிபி ராதாகிருஷ்ணன். அதன்பின் தமிழக பாஜகவில் பல்வேறு பொறுப்புகளில் இருந்த அவருக்கு, 2023ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநில ஆளுநர் பொறுப்பு அளிக்கப்பட்டது. அதன்பின் தெலங்கானா, புதுச்சேரி ஆளுநராகவும் செயல்பட்டார்.
தற்போது மகாராஷ்டிரா மாநில ஆளுநராக செயல்பட்டு வருகிறார். தமிழ்நாட்டைச் சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் பாஜக் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதற்குப் பின் அரசியல் காரணங்கள் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ளது.
அதேபோல் நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணியின் பலம் மிகப்பெரியளவில் இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை முன் மொழிந்திருப்பதால், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் குடியரசு துணைத் தலைவராக சிபி ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றால், 5 ஆண்டுகள் அவர் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications