அதிகரிக்கும் கொரோனா.. இந்தியாவில் ஒரு நாள் பாதிப்பில் "இந்த" 6 மாநிலங்களில் 80 சதவீதம் பேர்!
டெல்லி: 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80 சதவீதம் பேர் தமிழகம் உள்பட 6 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத் துறை கவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குறைந்து கொண்டே வந்த கொரோனா வைரஸ் கேஸ்களின் எண்ணிக்கை தற்போது திடீரென அதிகரித்து கொண்டே வருகிறது. இது இரண்டாவது அலையா என்ற அச்சம் எழுந்துள்ளது.
இது மட்டுமல்லாமல் புதிய வகை கொரோனா வேறு பரவி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.
பாஜகவில் சேர்ந்த 2 நாட்களில் மிதுன் சக்கரவர்த்திக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு
அதிக பாதிப்பு
அதில் இன்று ஒரே நாளில் இந்தியாவில் 17,921 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் 80 சதவீதம் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், கர்நாடகா, குஜராத், தமிழகம் ஆகிய 6 மாநிலங்களை சேர்ந்தவர்களாவர். இது வரை இந்தியாவில் 22 கோடிக்கு மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினமும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மகாராஷ்டிராவில் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்படுகிறது.
133 பேர்
மகாராஷ்டிராவில் 9,927 புதிய கேஸ்கள் உள்ளன. அதற்கடுத்த இடத்தில் பஞ்சாப் உள்ளது. பஞ்சாபில் ஒரே நாளில் 1027 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் 133 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். இந்த பலி எண்ணிக்கையில் மேற்கண்ட 5 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் 77 சதவீதம் பேர் உள்ளனர்.
19 மாநிலங்களில் பலி இல்லை
மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக ஒரே நாளில் 56 பேர் பலியாகிவிட்டனர். பஞ்சாபில் 20 பேரும் கேரளாவில் 16 பேரும் பலியாகிவிட்டனர். 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனாவால் யாரும் பலியாகவில்லை. அந்த மாநிலங்கள் எவை என்றால், ராஜஸ்தான், ஆந்திரா, சண்டீகர், ஒடிஸா, உத்தரகண்ட், ஜார்க்கண்ட், பீகார், புதுச்சேரி, லட்சத்தீவு, சிக்கிம், லடாக், மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து, டாமன், டையு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி. திரிபுரா, மிஸோரம், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள், அருணாசல பிரதேசம் ஆகியவை ஆகும்.
டோஸ்கள்
இன்று ஒரே நாளில் 2.43 கோடி கொரோனா தடுப்பு மருந்துகள் செலுத்தப்பட்டன. அவற்றில் 71,30,098 சுகாதார பணியாளர்களும், 69,36,480 முன்கள பணியாளர்களுக்கும் முதல் டோஸும், 38,90257 சுகாதாரத் துறையினருக்கும், 4,73,422 முன்கள பணியாளர்களுக்கும் இரண்டாவது டோஸும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டது.
53 ஆவது தடுப்பு மருந்து முகாம்
அது மட்டுமல்லாமல் 45 வயதுக்கு மேற்பட்டு துணை நோய் இருப்பவர்கள் 8,33,526 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோர் 51,04,123 பேருக்கும் முதல் டோஸ் வழங்கப்பட்டன. 53 ஆவது நாளாக நிகழ்த்தப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து முகாமில் 13.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.