ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த டெல்லி வந்த தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தம்
டெல்லி: நெல், கரும்புக்கு அடிப்படை ஆதார விலையை உயர்த்தக் கோரி திருச்சியில் இருந்து டெல்லி சென்ற தமிழக விவசாயிகள் ரயில் நிலையத்திலேயே போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஓராண்டுக்கும் மேலாக டெல்லியில் எல்லையில் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 19 ஆம் தேதி வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டதை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த நிலையில் நெல், கரும்புக்கு அடிப்படை ஆதார விலையை உயர்த்தக் கோரி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த திருச்சியிலிருந்து டெல்லிக்கு தமிழக விவசாயிகள் ரயில் மூலம் வந்தனர். அய்யாக்கண்ணு தலைமையில் வந்த 80 க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்பதால் அவர்களை திரும்பி செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் போலீஸாரின் அறிவுரையை ஏற்க மறுத்து விவசாயிகள் ரயில் நிலையத்தில் உள்ளனர்.
மேலும் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை பஞ்சாப் விவசாயிகளை போல காலவரையறையின்றி போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications