திருச்சூர் தங்க வியாபாரி வீட்டில் 3 கிலோ தங்கம் கொள்ளை.. டெல்லியில் பிடிபட்டார் தமிழக இளைஞர்
டெல்லி: கேரளா மாநிலம் திருச்சூரில் தங்க வியாபாரியிடம் இருந்து 3 கிலோ தங்கம் மற்றும் 2 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்ற தமிழக இளைஞர் டெல்லியில் கைது செய்யப்பட்டார்.
திருச்சூர் மாவட்டம் தம்புரான்பாடியில் குறிஞ்சியூரை சேர்ந்த கே வி பாலன் என்பவரது வீடு உள்ளது. இவர் தங்க வியாபாரி. கடந்த 12 ஆம் தேதி இவரது வீட்டில் 3 கிலோ தங்கமும், ரூ 2 லட்சம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டது.
இதையடுத்து புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் கைரேகைகளை சேகரித்தனர். இந்த நிலையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது 12 ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு யாரோ ஒரு மர்ம நபர் வீட்டிற்குள் நுழையும் காட்சிகள் இடம்பெற்றன.

லாக்கர் உடைந்தது
ஆனால் அவரது முகம் தெளிவாக தெரியவில்லை. இதையடுத்து அக்கம் பக்கம் வீடுகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர். பாலனின் வீட்டில் லாக்கரை உடைத்து தங்கம் திருடப்பட்டது. இந்த லாக்கரின் உடைந்த கதவு மாடிபடியின் கீழே இருந்தது. அந்த வீட்டில் பாலனும் அவருடைய மனைவி ருக்மினியும் மட்டுமே இருந்துள்ளனர்.

சினிமா
இவர்கள் சம்பவ தினத்தன்று சினிமா படம் பார்க்க தியேட்டருக்கு சென்றுவிட்டனர். பின்னர் இரவு 9.30 மணிக்கு திரும்பி வந்தபோதுதான் திருட்டு சம்பவம் நடந்தது தெரியவந்தது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தார்கள்.

தங்கம், பணம்
அதில் இந்த சம்பவத்தில் தமிழகத்தில் எடப்பாலை சேர்ந்த தர்மராஜ் என்பவர் ஈடுபட்டதும் அவர் கொள்ளையடித்த தங்கம், பணத்துடன் டெல்லி தப்பியதும் தெரியவந்தது. டெல்லி போலீஸாரின் உதவியுடன் தர்மராஜ் பிடிபட்டார். அவரை விமானம் மூலம் குருவாயூர் கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தங்க நகை கடை
இவர் மட்டும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டாரா இல்லை வேறு யாராவது உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலன் தங்க நகைக் கடை வைத்துள்ளார். இதற்காக மொத்தமாக தங்கத்தை வாங்கி தனது வீட்டில் லாக்கரில் வைத்திருந்து தேவைப்படும் போது கடைக்கு எடுத்து செல்வது வழக்கம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications