அனைவருக்கும் கார் பரிசு.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு இன்ப அதிர்ச்சி! டாடா மோட்டார்ஸ்அறிவிப்பு
டெல்லி: மகளிர் உலககோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தான் டாடா மோட்டார்ஸ் சார்பில் விரைவில் அறிமுகம் ஆகும் சியரா கார் அணியில் இடம்பெற்ற வீராங்கனைகள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஒட்டுமொத்த பார்வையையும் தன்வசப்படுத்தி உள்ளது. மகளிருக்கான 50 ஓவர் உலககோப்பை போட்டியில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது தான் இதற்கு காரணம். கடந்த ஞாயிற்றுக்கிழமை மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பை கிரிக்கெட் மைதானத்தில் பைனல் நடந்தது.

இதில் தென்ஆப்பிரிக்கா அணியை இந்திய அணி எதிர்கொண்டது. இந்திய மகளிர் அணி முதலில் பேட் செய்து 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 298 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய தென்ஆப்பிரிக்கா அணி 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய மகளிர் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வென்று உலககோப்பையை வென்று சாதனை படைத்தது.
இதனால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்து வருகிறது. அந்த வகையில் தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சார்பில் மகளிர் அணிக்கு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் சார்பில் டாடா சியரா எஸ்யூவி (Tata Sierra Suv) கார் விரைவில் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
டாடா சியரா கார் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை வரலாற்றில் தனி இடம் பிடித்துள்ளது. இந்த கார் முதல் முறையாக கந்த 1991ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து அடுத்தடுத்து புதிய வசதிகளுடன் கார் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நவம்பர் 25ம் தேதி சியராவின் புதிய ரக கார்கள் மார்க்கெட்டுக்கு அறிமுகம் ஆக உள்ளது. அந்த கார் modern 5-door monocoque vehicle ஆக விற்பனைக்கு வருகிறது. இந்த கார் தான் அனைத்து வீராங்கனைகளுக்கும் வழங்கப்பட உள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டாடா மோட்டார்ஸ் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‛‛டாடா மோட்டார்ஸ் சார்பில் டாப் - எண்ட்மாடல் சியரா கார் அனைத்து வீராங்கனைகளுக்கும் வழங்கப்பட உள்ளது. உலககோப்பை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த அவர்களின் மகத்தனா பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டி இந்த பரிசு வழங்கப்பட உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், சிஇஓவுமான சைலேஷ் சந்திரா கூறுகையில், ‛‛இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தங்களின் சிறப்பான செயல்பாட்டின் மூலமாக உலககோப்பையை வென்று ஒட்டுமொத்த நாட்டையும் பெருமைப்பட வைத்துள்ளது. அவர்களின் பயணம் ஒவ்வொரு இந்தியனையும் ஊக்குவிக்கும் வகையில் நம்பிக்கையின் வெளிப்பாடாக உள்ளது. அவர்களுக்கு சியரா கார் பரிசாக வழங்கப்பட உள்ளது'' என்று கூறியுள்ளார்.
முன்னதாக மகளிர் கிரிக்கெட் அணிக்கு பிசிசிஐ சார்பில் ரூ.51 கோடி பரிசு அறிவிக்கப்பட்டது. இதுதவிர ஒவ்வொரு மாநிலங்களும் தங்களின் மாநிலத்தை சேர்ந்த வீராங்கனைகளுக்கு தனித்தனியாக பரிசுகள் அறிவித்து வருகிறது.












Click it and Unblock the Notifications