ஆந்திரா தேர்தல்: பாஜகவை தோளில் சுமக்க சந்திரபாபு நாயுடு ரெடி! அமித்ஷாவுடன் திடீர் சந்திப்பால் பரபர!
டெல்லி: ஆந்திரா சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தெலுங்குதேசம் கட்சித் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு நேற்று இரவு திடீரென சந்தித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்த நாடும் ஒடிஷா ரயில்கள் விபத்தால் பெரும் சோகத்தில் மூழ்கியது. ஒடிஷா ரயில்கள் விபத்தில் சிக்கி பலியானோ எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 900 ஆகவும் உயர்ந்தது. இந்த விபத்து ஒருபுறம் இருக்க அரசியல் களத்தை நேற்று இரவு திடீரென பரபராக்கியது அந்த டெல்லி சந்திப்பு.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இல்லத்தில் நேற்று இரவு தெலுங்குதேசம் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு திடீரென சந்தித்து பேசினார். ஆந்திரா சட்டசபைக்கு அடுத்த ஆண்டு, லோக்சபா தேர்தலுடன் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் இப்போதே ஆந்திரா மாநில அரசியல் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பல்வேறு இலவச அறிவிப்புகளைக் கொண்ட தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியை சந்திரபாபு நாயுடு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் நேற்று இரவு அமித்ஷாவை சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார். ஆந்திராவைப் பொறுத்தவரையில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் இடையேதான் நேரடி போட்டி. காங்கிரஸ், பாஜகவும் களத்தில் இருக்கின்றன அவ்வளவே. ஆனால் தற்போது சந்திரபாபு நாயுடு சந்திப்பால் பாஜகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் ஆகியவற்றில் ஆந்திராவில் பாஜகவுக்கு கூட்டணி கிடைத்துவிட்டது என்பதுதான் இந்த உற்சாகத்துக்கு காரணம்.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக வென்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய தருணத்தில் அந்த கூட்டணியில் இருந்து முதல் கட்சியாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் வெளியேறியது. கடந்த சில மாதங்களாக பிரதமர் மோடியை சந்திரபாபு நாயுடு பாராட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications