"நவம்பர் 18ல் பீகார் முதல்வராக பதவியேற்பேன்”.. தேர்தலுக்கு முன்பே தேதி குறித்த தேஜஸ்வி யாதவ்!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறியுள்ள ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், தன்னுடைய பதவி ஏற்பு விழா தேதியை அறிவித்துள்ளார். நவ.14ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும், நவ.18ம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகார் இளைஞர்கள் எனக்கு 5 ஆண்டுகள் ஆட்சியமைக்க வாய்ப்பளித்தால் போதும் என்று மகாகத்பந்தன் கூட்டணியின் பீகார் மாநில முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் டிஜிட்டல் பிரச்சாரத்தில் வாக்கு சேகரித்துள்ளார்.

பீகார் சட்டசபைக்கு இந்த மாதம் இரு கட்டங்களாக (நவம்பர் 6, 11) தேர்தல் நடைபெறவுள்ளது. சட்டசபைத் தேர்தலையொட்டி பல்வேறு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்குமா அல்லது தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஃபேஸ்புக் சமூக ஊடகத் தளத்தில் நேரலையில் பிரசாரத்தில் ஈடுபட்ட தேஜஸ்வி யாதவ் பேசுகையில், "பீகார் இளைஞர்களிடம் நான் ஒன்றை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். உங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையில், ஒரேயொருமுறையாவது மகாகத்பந்தன் கூட்டணிக்கு வாக்கு செலுத்துங்கள் வேலை, சிறந்த வாய்ப்புகளுக்காக மற்றும் பீகாரின் மேம்பாட்டுக்காக இதனைச் செய்யுங்கள்.
நான் ஒன்றும் உங்களிடம் 20 ஆண்டுகள் வாய்ப்பு கேட்கவில்லை. உங்களின் பேராதரவு எனக்கு வெறும் ஐந்தாண்டுகளுக்கு போதும். ஒருவேளை நான் அளித்துள்ள அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றத் தவறினால், எனக்கு நீங்கள் அதன்பின் வாக்கு செலுத்தவே வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பீகார் சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று கூறியுள்ள ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், தன்னுடை பதவி ஏற்பு விழா தேதியை அறிவித்துள்ளார். நவ.14ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும், நவம்பர் 18 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
பீகாரின் அர்ராவில் நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி,'மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவை அறிவிக்க காங்கிரஸ் விரும்பவில்லை. ஆனால் ஆர்ஜேடி, காங்கிரஸின் தலையில் ஒரு துப்பாக்கியை வைத்து முதல்வர் வேட்பாளரை அறிவிக்க கட்டாயப்படுத்தினர். ஆர்ஜேடிக்கும், காங்கிரஸுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. ' எனக் கூறி இருந்தார்.












Click it and Unblock the Notifications