காஷ்மீரில் சுற்றுலா பயணிகளின் பேண்டை கழட்டி.. இந்துவா என்று சோதித்த தீவிரவாதிகள்.. என்ன நடந்தது?
ஸ்ரீநகர்: பல நாட்களாக அமைதியாக இருந்த ஜம்மு காஷ்மீர் தற்போது தான் மெல்ல மெல்ல சுற்றுலா பயணிகளுக்கு பிடித்த பகுதியாகவும், விரும்பி வரும் பகுதியாகவும் மாறி இருந்தது. ஆனால் சுற்றுலா பயணிகளின் நம்பிக்கையை உடைக்கும் வகையில் ஒரு சம்பவம் காஷ்மீரில் நடந்துள்ளது. தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் இன்று மாலையில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து களம் இறங்கிய பயங்கரவாதிகள், அவர்களின் மத அடையாளத்தை சரிபார்த்த பின்னரே தாக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
காஷ்மீரின் புகழ் பெற்ற பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கு என்பது, மிகவும் அழகான காடுகளையும், பூங்காக்களையும் கொண்ட பகுதியாகும்.அங்கு மனதை மயக்கும் ஏரிகளும், மிகப்பெரிய அளவில் புல்வெளிகளும் அமைந்துள்ளன.இந்த பகுதிக்கு நேரடியாக வாகனங்கள் மூலம் போக இயலாது. நடந்து போகலாம் அல்லது குதிரை மூலமாகவோ மட்டுமே போக முடியும். இங்கு கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் குதிரை சவாரி செல்வார்கள். இந்நிலையில் இன்று மாலை பயங்கரவாதிகள் திடீரென உள்ளே புகுந்தனர். பிரபலமான ரிசார்ட் பகுதிக்கு அருகே சுற்றுலா பயணிகளை சரமாரியாக சுட்டுள்ளனர்.இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர். 12 பேர் காயம் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகாரப்பூர்வ தகவல் வந்த பின்னரே உறுதியான தகவல்கள் தெரியவரும்.
இந்நிலையில் உயிர் தப்பி சுற்றுலா பயணிகள் கூறுகையில், துப்பாக்கிகளுடன் வந்த பயங்கரவாதிகள், சுற்றுலா பயணிகளின் பேண்ட்டை கழற்றி, அவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்தினார்கள் என்றும். அவர்களின் அடையாள அட்டைகளைச் சரிபார்த்து துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்றும் கண்ணீர் மல்க கூறினார்கள்.
சம்பவ இடத்திலிருந்து வரும் மனதை உலுக்கும் வீடியோவில், ஒரு பெண், "தயவுசெய்து என் கணவரைக் காப்பாற்றுங்கள்" என்று அழுவதாக வீடியோ இருக்கிறது. உதவிக்காக மன்றாடும் அந்த பெண்ணின் குரல் மீண்டும் மீண்டும் உடைகிறது.. அவர் அந்த அளவிற்கு அழுகிறார். கணவரை காப்பாற்ற முடியாமல் போகுமோ என்ற பயத்துடன் கண்ணீர் விடுவதாக வீடியோ இருந்தது.
தீவிரவாதிகள் மத அடையாளத்தை சோதித்த பின்னர், ஒரு அப்பாவி இந்து சுற்றுலாப் பயணியை சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் தப்பிய சுற்றுலா பயணிகள் கூறினார்கள். அதே நேரத்தில் அவரது மனைவி காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார்.. பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியில் ஒரு பெரிய தேடுதல் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு இந்தியா முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் இந்த சம்பவத்தை நிகழ்த்தி இருப்பது தெரியவந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட இந்த மோசமான தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) பொறுப்பேற்றிருக்கிறது.












Click it and Unblock the Notifications