அதானி குழுமத்திடம் கொடுக்கப்பட்ட நாட்டின் 5 முக்கிய விமான நிலையங்கள்.. அதுவும் 50 வருடங்கள்
Recommended Video
டெல்லி: திருவனந்தபுரம், மங்களூரு உட்பட நாட்டின் முக்கியமான 5 விமான நிலையங்களை மேம்படுத்தி பராமரிப்பதற்கான பணிகளை அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத் தலைமையிடமாகக் கொண்டது அதானி குழுமம்.
விமான நிலைய பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதாக இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்து, அதற்காக டெண்டர்கள் கோரியிருந்தது. இதில் 32 நிறுவனங்கள் பங்கேற்றன.
5 விமான நிலையங்களுக்கு டெண்டர்
திருவனந்தபுரம், மங்களூரு, ஜெய்ப்பூர், லக்னோ, அகமதாபாத் மற்றும் கவுகாத்தி ஆகிய 6 விமான நிலையங்களை மேம்படுத்துவது மற்றும் பராமரிப்பதற்காக 50 ஆண்டுகால குத்தகைக்கு இந்த டெண்டர்கள் விடப்பட்டிருந்தன. அதில் கவுகாத்தி தவிர மற்ற 5 விமான நிலையங்களுக்குமான டெண்டர் நேற்று திறக்கப்பட்டது. அவை அனைத்திலுமே அதானி குழுமம் வெற்றி பெற்றுள்ளது.
முதல் முறையிலேயே வெற்றி
இந்த விமான நிலையங்களில் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் தற்போது இந்திய விமான நிலைய ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. அடுத்த 90 நாட்களுக்குள் இவை அதானி குழுமத்துக்கு கைமாற்றி ஒப்படைக்கப்படும். அதானி குழுமம் முதல்முறையாக விமான போக்குவரத்து துறைக்குள் காலடி எடுத்து வைத்துள்ள, நிலையில் ஐந்து டெண்டர்களிலும் வெற்றி பெற்று சாதித்துள்ளது.
5வது புதிய துறை
2014 முதல் 2018 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அதானி குழுமம் காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்வது, சோலார் மின் உற்பத்தி, மின் வினியோகம் மற்றும் விண்வெளி பாதுகாப்பு உள்ளிட்ட நான்கு துறைகளில் தொழில்களை ஆரம்பித்துள்ளது. தற்போது விமான போக்குவரத்து துறைக்குள்ளும் நுழைந்துள்ளது.
டெண்டர் விவரங்கள்
டெண்டரில் குறிப்பிட்டுள்ள விவரத்தின்படி, பயணி ஒருவருக்கு எந்த நிறுவனம் அதிகமான அளவுக்கு மாதாந்திர கட்டணம் தருகிறதோ அந்த நிறுவனத்திற்கு ஏலம் வழங்கப்படும். அதன்படி போட்டி நிறுவனங்களை விட சுமார் இரு மடங்கு அளவிற்கு அதிக பணம் தருவதாக அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம் தனது ஒப்பந்தப்புள்ளியில் தெரிவித்துள்ளது. உதாரணத்திற்கு ஜெய்ப்பூர் விமான நிலையத்தில், பயணி ஒருவருக்கு, ஜிஎம்ஆர் நிறுவனம் ஒரு பயணிக்கு ரூ.69 தருவதாக கூறிய நிலையில், அதானி நிறுவனம் ரூ.174 வழங்குவதாக கூறியுள்ளது. அரசுக்கு அதிக லாபம் கிடைக்கும் என்பதால் அதானி எண்டர்பிரைசஸ் ஏலத்தை வென்றுள்ளதாக கூறப்படுகிறது.