'அங்கீகரிக்க முடியாது'.. தன்பாலின திருமணத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு.. உச்ச நீதிமன்றத்தில் கறார்!
தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது
டெல்லி: தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்த நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.
இந்தியாவில் இந்து திருமண சட்டம், வெளிநாட்டு திருமண சட்டம் என சில திருமண சட்டங்கள் இருந்தாலும், தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் குறித்து எவ்வித உறுதியான சட்டமும் தற்போதுவரை கிடையாது. திருணம் கூட இரண்டாவதுதான், ஆனால் அதற்கு முன்னாள் தன்பாலின சேர்க்கை என்பதையே இந்திய சமூகம் தொடக்கத்தில் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த 2018ம் ஆண்டுதான் இதற்கு இருந்த தடையை உச்சநீதிமன்றம் விலக்கியது.

இதனையடுத்து தன்பாலின ஈர்ப்பாளர்கள் தங்கள் திருமணத்தை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று நீதிமன்றங்களை நாட தொடங்கினர். இவர்களை ஆதரிக்கும் அரசியல் கட்சியினரும் நீதிமன்றத்தை நாட தொடங்கினர். கேரளா உள்ளிட்ட பல்வேறு உயர்நீதிமன்றங்களில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்த நிலையில் உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனையடுத்து இந்த அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றமே விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
எனவே உயர்நீதிமன்றங்களில் இருந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. இந்த மனுக்கள் மார்ச் மாதம் விசாரிக்க உள்ளதாக கடந்த ஜனவரியில் உச்சநீதிமன்றம் அறிவித்தது. அதேபோல தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் குறித்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து மத்திய அரசு தற்போது தனது கருத்தை பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளது. இதில், தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று கூறியுள்ளது. அதாவது, "ஹெட்ரோ-செக்சுவல் எனப்படும் ஆண்-பெண் திருமணத்தை மட்டுமே அங்கீகரிக்க முடியும்" என்று கூறியுள்ளது.
மேலும், "தன்பாலின் ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்காமல் இருப்பது பாரபட்சமான நடவடிக்கையாக கருத முடியாது. திருமணம் என்பதே ஒரு ஆண்-ஒரு பெண் என எதிர் பாலினத்தவர்கள் சேர்ந்து வாழ்வதுதான். இது போன்ற கருத்துக்கள் நமது சமூகம், கலாச்சாரத்தில் வேரூன்றி இருக்கிறது. எனவே இது நீதித்துறையின் தலையீட்டால் நீர்த்துப்போகக்கூடாது. அதேபோல திருமண சட்டங்கள் அனைத்தும் ஆணுக்கும்-பெண்ணுக்கும் இடையில்தான் இயற்றப்பட்டுள்ளன. தன்பாலின உறவின் கீழ் ஒன்றாக வாழ்பவர்களை இந்திய குடும்பத்துடன் ஒப்பிட முடியாது.
இதுமட்டுமல்லாது தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்கு அனுமதியளித்தால் அது குழந்தைகள் தத்தெடுப்பு, விவாகரத்து, பராமரிப்பு, வாரிசு உரிமை போன்ற சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. எனவேதான் நாங்கள் இத்திருமணத்திற்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தை எதிர்க்கிறோம். மேலும், தன்பாலின ஈர்ப்பாளர்களை போல பலர் சேர்ந்து வாழ்வதற்கு இங்கு அதிகாரப்பூர்வமாக எவ்வித தடையும் விதிக்கப்படாமல் இருக்கும்பட்சத்தில் திருமணத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று கோருவதற்கும் எந்த உரிமையும் கிடையாது" என்று மத்திய அரசு தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications