புகைப்பட போஸ்.. அமைச்சர் மாண்டவியா செயலால் மன்மோகன் சிங் குடும்பத்தினர் கடும் அதிருப்தி
டெல்லி: முன்னாள் பிரதமர்மன்மோகன் சிங் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புகைப்படத்தை, சமூக வலைதளங்களில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. குறிப்பாக மன்மோகன் சிங் குடும்பத்தினர் அமைச்சரின் செயலுக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வேண்டும் என தலைவர்கள் விருப்பம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கின் உடல்நலம் குறித்து விசாரிக்கச் சென்றார். மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் மன்சுக் மாண்டவியா புகைகப்படக்காரர்களை அழைத்து சென்றது சர்ச்சையானது.
இந்நிலையில் அமைச்சர் மன்சுக் மாண்டவியா புகைப்படக்காரர்களுடன் வந்து படம் எடுப்பதற்கு மன்மோகன்சிங்கின் மனைவி ஆட்சேபனை தெரிவித்துள்ளார். ஆனால் அதை அமைச்சர் பொருட்படுத்தவில்லை என்று புகார் எழுந்துளளது. இதுதொடர்பாக பேசியுள்ள மன்மோகன் சிங்கின் மகள் தாமன் சிங் வெளியிட்டுள்ள பதிவில், மன்சுக் மாண்டவியாவுடன் புகைப்படக்காரரும் உள்ளே வருவதற்கு எனது தாய் அனுமதிக்கவில்லை. ஆனாலும் அவரது பேச்சை கேட்காமல் உள்ளே நுழைந்திருக்கிறார்கள்.
எனது தந்தை முதியவர். அவர் ஒன்றும் உயிரியல் பூங்காவில் இருக்கும் மிருகம் அல்ல. இக்கட்டான சூழலில் இருந்து விடுபட வேண்டும் என நினைக்கிறோம். பார்வையாளர்கள் எவரையும் அனுமதிப்பதில்லை. ஏனெனில் தந்தைக்கும் நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் நேரில் வந்து விசாரித்தது மகிழ்ச்சிதான். இருப்பினும், இந்த சூழலில் போஸ் கொடுத்து புகைப்படம் எடுக்கும் மனநிலையில் என்னுடைய பெற்றோர் இருக்கவில்லை" இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் இந்தச் செயலுக்கு பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து அந்த படங்களை நீக்கினார். இருப்பினும், இந்த விவகாரம் குறித்து எய்ம்ஸ் அல்லது சுகாதார அமைச்சகத்திடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் இல்லை. காய்ச்சல் மற்றும் கடுமையான பலவீனம் உள்ளிட்ட பிரச்சனைகளை தொடர்ந்து, டாக்டர் மன்மோகன் சிங் கடந்த புதன்கிழமை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications