கத்தாரை கடுப்பாக்கி.. இந்தியாவையே ஆட வைத்த பெண்.. மோடியே ஃபாலோ செய்கிறார்.. யார் இந்த நுபுர் சர்மா?
டெல்லி: பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா நபிகள் நாயகத்துக்கு எதிராக பேசிய கருத்து இஸ்லாமிய நாடுகளில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, நபிகள் நாயகத்தை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். அவரை நேரடியாக இகழ்ந்து, சில அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பேசி இருந்தார்.
இவரின் விவாத வீடியோ வைரலாக பரவிய நிலையில் உத்தர பிரதேசத்தில் இவருக்கு எதிராக போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதில் ஏற்பட்ட கலவரத்தில் 30 பேர் வரை காயம் அடைந்தனர். 1500 பேர் மீது வழக்கும் பதியப்பட்டது.

கத்தார் கண்டனம்
நுபுர் சர்மா பேச்சை கத்தார், ஈரான் உள்ளிட்ட நாடுகள் பல கடுமையாக கண்டித்து இருந்தன. அதோடு கத்தார் சார்பாக இந்தியாவிற்கு சம்மனும் அனுப்பப்பட்டது. இந்தியா இதற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் கூறியது. இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். இவரை போலவே நபிகள் குறித்து ட்விட் செய்த நவீன் ஜிண்டால் என்று பாஜக நிர்வாகியும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

விளக்கம்
கத்தாரின் சம்மனை தொடர்ந்து இந்தியா சார்பாக கத்தார் அரசிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இவர்களின் கருத்துக்கும் இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கும் தொடர்பு இல்லை. இவை கலகத்தை ஏற்படுத்தும் (fringe element) நபர்களின் கருத்துக்கள்தான். ஏற்கனவே அந்த கருத்துக்களை தெரிவித்த நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. அதேபோல் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது என்று இந்திய அரசு விளக்கம் அளித்தது.

கத்தார் இந்தியா
நுபுர் சர்மாவின் ஒற்றை கருத்து இந்தியாவை உலக அளவில் தலைகுனிய வைத்துள்ளது. கத்தாரை இப்படி கதற வைத்து.. இந்தியாவையும் ஆட வைத்துள்ள இந்த நுபுர் சர்மா யார்? இவர் பாஜகவில் பெரிய பொறுப்பிற்கு வந்தது எப்படி? வாருங்கள் பார்க்கலாம்... பாஜகவில் நேற்று பிற்பகல் வரை செய்தி தொடர்பாளராக இருந்தவர்தான் நுபுர் சர்மா. இவர் டெல்லி ஹிந்து கல்லூரியில் சட்டம் மற்றும் பொருளாதாரம் படித்தவர். அதன்பின் லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் கல்லூரியில் எல்எல்எம் படித்தவர், பின்னர் அரசியலில் ஆர்வம் காட்டினார்.

யார் இவர்?
டெல்லி பல்கலையில் இருந்த போதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான ஏபிவிபியல் இருந்தார். அதோடு டெல்லி பல்கலை மாணவர் அமைப்பின் தலைவராக இருந்தார். அங்குதான் இவரின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது. பின்னர் பாஜகவில் சேர்ந்தவர், வேகமாக முன்னேறி பாஜகவின் இளைஞரணி பிரிவின் தேசிய செயலாளாராக இருந்தார். பின்னர் இளைஞரணி தேசிய பொறுப்பாளராக உயர்ந்தார். பின்னர் பாஜக யுவா கமிட்டியின் தேசிய கமிட்டி உறுப்பினராக பாஜக மூலம் இவர் நியமிக்கப்பட்டார்.

பாஜக நிர்வாகி
இதன்பின் பாஜகவில் வேகமாக வளர்ந்து அதன் செய்தி தொடர்பாளர் ஆனார். அதோடு பாஜக சார்பாக தினமும் பல்வேறு செய்தி சேனல்களில் விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கினார். டெல்லி சட்டசபை தேர்தலில் புது டெல்லி தொகுதியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக இவர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இருந்தாலும் இந்த போட்டி காரணமாக இவர் தேசிய அளவில் கவனிக்கப்பட்டார்.

சர்ச்சைக்கு பெயர் போனவர்
இதற்கு முன் இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான பிரச்சாரங்களை, வாதங்களை இவர் தொலைக்காட்சிகளில் வைத்து இருக்கிறார். ஆனால் இந்த முறை கொஞ்சம் எல்லை மீறி, நபிகள் நாயகம் பற்றியே கடுமையாக பேசி இருக்கிறார். முதலில் தன்னுடைய வீடியோ பொய்யானது, எடிட் செய்யப்பட்டது என்று கூறியவர், பின்னர் சர்ச்சை காரணமாக தன்னுடைய கருத்தை வாபஸ் பெறுவதாக கூறினார்.

சிவன் கருத்து
அதோடு, சிவனை பலர் பல விவாத நிகழ்ச்சிகளில் இகழ்ந்து பேசுகிறார்கள். சாலையில் இருக்கும் கம்புகளுடன் லிங்கத்தை ஒப்பிட்டு பேசுகிறார்கள். ஆனால் அதை எல்லாம் இவர்கள் பெரிதாக்கவில்லை. நான் பேசியதை மட்டும் சர்ச்சையாக்குகிறார்கள் என்று பதில் விளக்கம் அளித்துள்ளார். இவரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் "கலக்கத்தை உண்டாக்கும்" நபர் என்று விமர்சனம் செய்து இருந்தாலும் பிரதமர் மோடியே இவரை ட்விட்டரில் பாலோ செய்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications