அனைவரும் சமமா? தன்பாலின ஈர்ப்பாளர் திருமணத்தை அங்கீகரிக்க மறுப்பது ஏன்! உச்சநீதிமன்றம் நறுக் கேள்வி
டெல்லி: தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்தை அரசு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், மத்திய அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்தில் இயற்றப்பட்ட சட்டத்தை நீதிபதிகள் மேற்கோள் காட்டி நீதிபதிகள் மத்திய அரசிடம் கேள்வியெழுப்பியுள்ளனர்.
உலகம் தோன்றியதற்கு எவ்வித அடிப்படை காரணமும் இல்லை என்பது எப்படி 100 சதவிகிதம் உண்மையோ, அதேபோல உலகில் உருவான உயிர்கள் மற்றும் அதில் இருக்கும் வேறுபாடுகளும் எவ்வித காரணமும் கிடையாது. சரியாக சொல்வதெனில் மனிதர்களாகிய நாம் உட்பட அனைத்து உயிரினங்களும் போகிற போக்கில் எந்த நோக்கமும் இன்றி உருவாக்கப்பட்டவர்கள்தான். இப்படி இருக்கையில் நமக்குள் ஏற்றத்தாழ்வுகள் ஏன்? என்கிற கேள்வி நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வந்திருக்கிறது.

அதிலும் குறிப்பாக நம்மில் வேறுபட்ட பாலினம் கொண்டவர்கள் ஏன் சமமாக நடத்தப்படுவதில்லை என்கிற கேள்வி சமீப காலமாக தீவிரமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. என்னது மாற்று பாலினத்தவர்கள் சமமாக நடத்தப்படவில்லையா? என்னங்க சொல்லீங்க? அவங்களுக்கும் ஓட்டு உரிமை உட்பட அனைத்தும் இருக்கத்தானே செய்கிறது? என்று நாம்மில் பலர் கேட்கலாம். ஆனால் இந்த சமூகத்தை சேர்ந்த சிலர் நீதிமன்றங்களில் பல வழக்குகளை தொடுத்திருக்கின்றனர்.
"இந்தியாவில் எல்லோரும் சமம் என்கிறீர்கள். இப்படி இருக்கையில் தன்பால் ஈர்ப்பாளரான நாங்கள் திருமணம் செய்து கொண்டால் ஏன் அதை அங்கீகரிக்க மறுக்கிறீர்கள்? இதன் மூலம் சமத்துவம் கேள்விக்குறியாகியுள்ளது" என்பதுதான் அவர்கள் தொடுத்துள்ள வழக்கின் சாராம்சம். பல்வேறு மாநிலங்களில் பல்வேறு சமூக ஆர்வலர்கள், இடதுசாரிகள், தன்பால் ஈர்ப்பாளர்களால் தொடுக்கப்பட்ட இந்த வழக்குகள் அனைத்தையும் உச்சநீதிமன்றம் ஒரே வழக்காக விசாரிப்பதாக ஏற்றுக்கொண்டது.
இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து கேள்வியெழுப்பியபோது, "இது நீதிமன்றத்தால் தீர்க்கப்படக்கூடிய பிரச்னை அல்ல. நாடாளுமன்றம் இதனை தீர்க்கும். மட்டுமல்லாது தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணம் என்பது நகர்ப்புற மேல்தட்டு வர்க்கத்தின் சிந்தனை. இந்தியாவில் திருமணம் ஒரு புனித நிகழ்வாக கருதப்படுகிறது. ஒரு ஆண், ஒரு பெண் மற்றும் குழந்தைகள் இதைத்தான் நாம் குடும்பமாக ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இப்படி இருக்கையில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் திருமணத்திற்கு அங்கீகாரம் கொடுக்க முடியாது" என்று கறாராக கூறிவிட்டது.
ஆனால் உச்சநீதிமன்றம் இதனை அவ்வளவு எளிதாக விடுவதாக இல்லை. இங்கிலாந்து உயர்நீதிமன்றம் சில வருடங்களுக்கு முன்னர் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் மாற்று பாலினத்தவர்கள் நிலையாக வாழ்ந்து வருகிறார்கள். எனவே இந்தியாவிலும் இதேபோல தன் பாலினஈர்ப்பாளர்களின் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை கொடுக்கலாம் என்று கூறியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டு 'கைடன் வெர்சஸ் காடின்-மென்டோசா' எனும் வழக்கில் லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியது.
அதாவது தன்பாலின ஈர்ப்பாளர்கள் மத்தியில் குற்றங்கள் இருந்தாலும் அதனை காரணமாக காட்டி அவர்களின் உரிமையை பறிக்க முடியாது என்று கூறியிருந்தது. இந்த தீர்ப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில் இதனை தன்பாலின ஈர்பாளர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம்.சிங்வி சுட்டிக்காட்டி, "இந்திய அரசியலமைப்ப சட்டம் சமத்துவத்திற்கு உத்தரவாதம் அளித்திருக்கிறது. இப்படி இருக்கையில் தன்பாலின ஈர்பாளர்களின் திருமணத்தை அங்கீகரிக்க மறுப்பதன் மூலம் சமத்துவத்தை நிராகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று கூறியிருந்தார். இதனை நீதிமன்றம் மேற்கோள் காட்டி மத்திய அரசிடம் கேள்வியெழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications