தேசிய மக்கள்தொகை பதிவேடு திட்டத்திற்கு மத்திய அரசு அதிரடி ஒப்புதல்.. ஆவணங்கள் தேவையில்லை என விளக்கம்
டெல்லி: தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான கணக்கெடுப்பின் எந்த ஆவணங்களும் கேட்கப்படாது என்றும் பயோமெட்ரிக் கேட்கப்படாது என்றும் மக்கள் கூறும் தகவல்களே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்தார்.
நாடு முழுவதும் என்ஆர்சி மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்து போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சுதந்திரத்துக்குப்பின் அரசியலமைப்பு சட்டவிதிகள்படி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தப்படுவது இயல்பு. அதன்படி வரும் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள கணக்கெடுப்பு 8-வது கணக்கெடுப்பாக நடத்தப்பட உள்ளது.
கணக்கெடுப்பு பணி
இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டை சரிபார்த்தல் பணி, வீட்டுப்பட்டியல் மற்றும் வீட்டுக்கணக்கெடுப்பு, மக்கள் தொகை கணக்கெடுப்பு என 2 கட்டங்களாக நடத்தப் பட உள்ளது.
வசதிகள் கணக்கெடுப்பு
2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை வீட்டின் நிலை, குடும்பங்களுக்கு கிடைக்கும் வசதிகள் மற்றும் சொத்துகள் போன்றவற்றை அடையாளம் கண்டு பட்டியல் வெளியிடப்படும்.
ஒப்புதல் அளித்துள்ளது
நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்காக கடந்த 2010-ம் ஆண்டு தேசிய மக்கள் தொகை பதிவேடு உருவாக்கப்பட்ட நிலையில் 2021ம் ஆண்டுக்கான கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட உள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் என்ஆர்சி மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்து போராட்டங்கள் நடந்துவரும் நிலையில் தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
13000 கோடி ஒதுக்கீடு
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கு ரூ.3941 கோடியும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்காக ரூ.8,754 கோடியும் என அரசு மொத்தமாக ரூ .13,000 கோடியை ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார். அனைத்து மாநிலங்களும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அதற்காக பயிற்சி அளிக்ககப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
ஆவணங்கள்
தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான கணக்கெடுப்பின் எந்த ஆவணங்களும் கேட்கப்படாது என்றும் பயோமெட்ரிக் கேட்கப்படாது என்றும் மக்கள் கூறும் தகவல்களே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்தார்.