உதவிக்கரம் நீட்டிய அமெரிக்கா.. 2வது கட்டமாக 100 நவீன வெண்டிலேட்டர்களை இந்தியாவுக்கு வழங்கியது
டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் வகையில் மேலும் 100 வெண்டிலேட்டர்களை, இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.
அமெரிக்க அரசு, சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சி (யு.எஸ்.ஏ.ஐ.டி) மூலம், இந்திய அரசு மற்றும் இந்திய செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து, இந்தியாவுக்கு உதவுவதற்காக 100 புதிய, அதிநவீன வென்டிலேட்டர்களை நன்கொடையாக வழங்கியது. இது அந்த நாட்டின் 2வது கட்ட உதவியாகும். ஏற்கனவே, 100 வென்டிலேட்டர்கள் அடங்கிய முதல் கட்ட உபகரணங்கள் ஜூன் 14ம் தேதி இந்தியாவுக்கு வந்தது.

இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை வழங்குவதாக அறிவித்துள்ள அமெரிக்க தூதர் கென்னத் ஐ. ஜஸ்டர், "இந்தியாவின் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு உதவ தேவையான இந்த பொருட்களை வழங்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். அதை நிறைவேற்றி, 100 வென்டிலேட்டர்களின் இரண்டாவது கட்ட உபகரணங்களை இந்தியாவுக்கு ஒப்படைப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். " என்றார்.

இந்த வென்டிலேட்டர்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை. மேலும் அவை தூக்கிச் செல்ல எளிதானவை. பைப்கள் உள்ளிட்ட பிற உபகரணங்களும் இதனுடன் சேர்த்து இந்தியாவுக்கு வழங்கப்படும். இந்த வென்டிலேட்டர்களைப் பயன்படுத்தி சுகாதார வசதிகளின் திறனை மேம்படுத்துவதற்காக யு.எஸ்.ஏ.ஐ.டி இந்திய அரசுடன் நெருக்கமான உறவை பேணி வருகிறது.

இதுகுறித்து, இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மொத்தம் 200 வெண்டிலேட்டர்களை இந்தியாவுக்கு வழங்கும் முடிவு, அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவின் ஒரு அங்கமாகும்.

ஆகஸ்ட் 7ம் தேதி வரையிலான நிலவரப்படி, இந்தியாவில், 30 லட்சம் மக்கள், சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சி மூலமாக, சுகாதாரம் சார்ந்த பலனை பெற்றுள்ளனர். 40,700 சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு, சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க ஏஜென்சி பயிற்சி அளித்துள்ளது.
கொரோனாவை கட்டுப்படுத்த, அமெரிக்கா தனது நட்பு நாடுகளுக்கு தொடர்ந்து உதவிகள் செய்யும். அரசுகள், தொழில்கள், தன்னார்வ நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் வழியாகவும், அமெரிக்கா தனது உதவிக்கரத்தை நீட்டும். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications