பரபர சூழல்.. நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் துவங்கியது.. ராஜ்யசபா தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்பு
டெல்லி: பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு துவங்கியது. டிசம்பர் 29 வரை நடக்கும் இந்த கூட்டத்தில் வேலைவாய்ப்பின்மை, உயர்ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு, இந்தியா-சீனா எல்லை பிரச்சனை உள்பட பல்வேறு மக்கள் பிரச்சனைகளை கூறி புயலை கிளப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ள நிலையில் 16 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மேலும் புதிய துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற ஜெகதீப் தன்கர் ராஜ்யசபா தலைவராக இன்று பொறுப்பேற்றார். இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டவர்கள் அவரை பாராட்டி பேசினார்.
இந்தியாவில் எப்போதும் நவம்பர் மாதம் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும். இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டசபை தேர்தல்களால் இந்த ஆண்டு நவம்பரில் நாடாளுமன்ற கூட்டம் நடத்தப்படவில்லை.
16 முக்கிய மசோதா.. ஒத்துழைப்பு கோரி இன்று அனைத்து கட்சி கூட்டம்..நாளை நாடாளுமன்ற குளிர்கால கூட்டம்
நாடாளுமன்ற கூட்டம் துவக்கம்
இதனால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ளது. நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை இன்று துவங்கி நடைபெற உள்ளது. இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்கியது. டிசம்பர் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 17 அமர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்திருந்தது.
ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்பு
இன்று துவங்கிய நாடாளுமன்ற கூட்டத்தில் இந்தியாவின் துணை ஜனாதிபதியாக உள்ள ஜெகதீப் தன்கர், நாடாளுமன்ற ராஜ்யசபையின் தலைவராக பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து ஜெகதீப் தன்கரை புகழ்ந்து பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டவர்கள் புகழ்ந்து பேசினார்.
அனைத்து கட்சி கூட்டம்
முன்னதாக, நாடாளுமன்ற கூட்டத்தொடரை அமைதியாக நடத்த ஒத்துழைப்பு கோரி டெல்லியில் நேற்று மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. நாடாளுமன்ற நூலக கட்டத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களை சேர்ந்த அரசியல் கட்சி எம்பிக்களின் குழு தலைவர் பங்கேற்றனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, காங்கிரஸின் ஆதீர் ரஞ்சன் சவுத்ரி, திமுகவின் டிஆர்பாலு, திருச்சி சிவா, அதிமுகவின் தம்பிதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல் நாடாளுமன்ற அலுவல் கூட்டம் நடைபெற்றது.
பிரச்சனைகளை கிளப்ப திட்டம்
இந்நிலையில் தான் இன்று காலை நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்க உள்ளது. இந்த கூட்டத்தில் மக்கள் பிரச்சனைகளை முன்வைத்து பிரச்சனைகளை கிளப்ப காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், இந்திய சீன எல்லைப்பிரச்னை, ஒரே நாளில் தேர்தல் ஆணையரை நியமித்தது, பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதி பிரிவினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு, புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது உள்ளிட்ட பிரச்சனைகளை விவாதிக்ககோரி எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கப்பட உள்ளன. இதனால் நாடாளுமன்ற கூட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
16 மசோதாக்கள் நிறைவேற்றம்
இதுஒருபுறம் இருக்க இந்த கூட்டத்தில் 16 மசோதாக்களை மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பல்வேறு மாநில கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகத்தை வெளிப்படைத்தன்மையுடன் வலுப்படுத்துதல் தேர்தல் செயல் முறை சீர்த்திருத்தம், கடலோர மீன் வளர்ப்பு ஆணைய மசோதா, வனப்பாதுகாப்பு மசோதாவை கூறலாம். மேலும் 1948ல் கொண்டு வரப்பட்ட பல் மருத்துவர் சட்டத்தை நீக்கி தேசிய பல் மருத்துவ ஆணையத்தை உருவாக்கும் மசோதா, 1947ல் இயற்றப்பட்ட இந்திய நர்சிங் கவுன்சில் சட்டத்தை நீக்கிவிட்டு தேசிய நர்சிங் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆணையத்தை உருவாக்கும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.