அயோத்தி வழக்கு:காஞ்சி சங்கராச்சாரியார் முயற்சி உட்பட 4 முறை தோல்வியில் முடிந்த அயோத்தி மத்தியஸ்தம்!
டெல்லி: அயோத்தி பிரச்சினையில், மத்தியஸ்தர்கள் மூலம் தீர்வு காண உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தலைமையில், 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தம் நடைபெறுவது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்பாக குறைந்தது நான்கு முறையாவது, இதுபோல மத்தியஸ்த முயற்சிகள் நடந்துள்ளன.
வி.பி.சிங் பிரதமராக பதவி வகித்தபோது, முதல் முறையாக, சமரச குழு மூலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை சிறப்பாகவே தொடங்கியது. எனவே அவசர சட்டம் மூலமாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண வி.பி.சிங் அரசு தயாரானது. ஆனால், இந்து-முஸ்லீம் குழுக்கள் நடுவே, பேச்சுவார்த்தையில் தீர்வு காணப்படவி்லலை என்பதால், அவசர சட்டம் கொண்டுவரும் முயற்சியை கைவிட்டது, வி.பி.சிங் அரசு.
சந்திரசேகர் பிரதமராக பதவி வகித்தபோது, மீண்டும், பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணும் முயற்சி நடைபெற்றது. ஆனால், பேச்சுவார்த்தை முடிவடைவதற்குள், அரசே கலைந்துவிட்டதால், பேச்சுவார்த்தை முடிவுக்கு வரவில்லை. நரசிம்மராவ் பிரதமராக பதவிக்கு வந்ததும், அவரும், இந்து-முஸ்லீம் அமைப்புகள் இடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். ஆனால், அந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு கிடைக்கவில்லை.
அயோத்தி வழக்கு.. 25 வருட நீண்ட பிரச்சனையை தீர்க்க போகும் 3 தமிழர்கள்.. இவர்கள்தான்!
4வது முறையாக பாஜகவின் வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்தபோது, அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிகள் நடந்தன. அயோத்தி பிரச்சினைகளை கையாளவே, தனியாக ஒரு பிரிவை தனது அலுவலகத்தில் ஆரம்பித்தார் வாஜ்பாய். இந்து-முஸ்லீம் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனியர் அதிகாரியையும், வாஜ்பாய் நியமித்தார். ஆனால், அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. 2003ல், காஞ்சி சங்கராச்சாரியார் மூலமாக, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முயன்றார் வாஜ்பாய். அப்போது, ஒரு மாதத்திற்குள், இந்த விவகாரத்தில் ஒரு மாதத்திற்குள், தீர்வு எட்டப்படும் என்று, ஜெயேந்திர சரஸ்வதி சாமிகளிடம், இந்து-முஸ்லீம் அமைப்புகள் உறுதியளித்திருந்தன. ஆனால் நடக்கவில்லை.