இந்த மூன்று வழிகள் தான்.. தமிழக ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் நேற்று சொன்ன முக்கியமான விஷயம்
டெல்லி: தமிழக சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் ரவி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதற்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. சட்டசபைக்கு திருப்பி அனுப்பி, அதை அரசு மீண்டும் நிறைவேற்றி அவருக்கு அனுப்பினால் அதன்பிறகு அதை குடியரசுத் தலைவருக்கு ஆளுநரால் அனுப்ப முடியாது என்றும், மூன்று வழிகள் மட்டுமே உள்ளதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களுக்கும் அம்மாநில அரசுகளுக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக மோதல் அதிகரித்துள்ளது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர்கள் நீண்ட காலம் கிடப்பில் போடுவதாக எதிர்க்கட்சிகள் ஆளும் எல்லா மாநிலங்களுமே குற்றம்சாட்டி வருகின்றன.

இதற்காக தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா ஆகிய மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் கவர்னருக்கு எதிராக வழக்கும் போட்டுள்ளன. நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு இந்த மாநிலங்கள் கோரி வருகின்றன. இந்த வழக்குகளை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், ஆளுநர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது அதேநேரம் ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தியும் தெரிவித்து வருகிறது-
இந்நிலையில் தமிழக சட்டசபை நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டதற்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிருப்தி தெரிவித்தது. மேலும் மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தை நாடும் வரை ஆளுநர்கள் காத்திருப்பது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி இருந்தது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்த பின்னர், தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த மாதம் திருப்பி அனுப்பினார்.
அதேநேரம் தமிழக அரசு அனுப்பி வைத்த 181 மசோதாக்களில் 152-க்கு ஒப்புதல் அளித்துவிட்டதாகவும், 5 மசோதாக்களை அரசே திரும்ப பெற்றுக்கொண்டதாகவும், 9 மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருப்பதாகவும் ஆளுநர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த மாதம் 18-ந் தேதி தமிழக சட்டசபையில் சிறப்பு கூட்டத்தொடர் கூட்டி, 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டன. அவை மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனிடையே மசோதாக்களை ஆளுநர் தற்போது ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கு மாநில சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடும் அதிருப்தி தெரிவித்தார்.
இதனிடையே தமிழக ஆளுநருக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, சட்டசபை மீண்டும் நிறைவேற்றி அனுப்பி இருக்கும் மசோதாக்களை ஜனாதிபதி ஒப்புதலுக்காக கவர்னர் அனுப்பி இருக்கிறார். இந்த மசோதாக்கள் மீது முடிவு எடுக்காமல் நீண்ட காலம் இருந்துவிட்டு கடந்த மாதம் 28-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். இது அரசியலமைப்பு திட்டத்தை "அப்பட்டமாக மீறும் செயல்" என்றார்.
மத்திய அரசு தரப்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் வெங்கடரமணி வாதிடுகையில், 'ஒரு மசோதாவை ஆளுநர் சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பும்போது, அது நிறுத்திவைக்கப்பட்டதாக அர்த்தம் அல்ல. மாறாக அதை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்பது மட்டுமே,. ஆனால் அந்த மசோதாவில் எந்தவித மாற்றமும் செய்ய முடியாது என சட்டசபை கூறினால், அதை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு கவர்னர் அனுப்ப முடியும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது என்றால், முதல் முறை தன்னிடம் வந்தபோதே ஆளுநர் அனுப்பி இருக்க வேண்டும். ஆனால் அவர் சட்டசபைக்கு திருப்பி அனுப்பி, அதை அரசு மீண்டும் நிறைவேற்றி அவருக்கு அனுப்பினால் அதன்பிறகு அதை குடியரசுத் தலைவருக்கு ஆளுநரால் அனுப்ப முடியாது.
அரசியல் சாசனப்பிரிவு 200-ன்படி ஒரு மசோதா தொடர்பாக ஆளுநருக்கு 3 வழிகள் மட்டுமே உண்டு. அதாவது, ஒப்புதல் அளிக்கலாம் அல்லது நிறுத்திவைக்கலாம் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். இந்த வழக்கில் மசோதாக்களை நிறுத்திவைத்திருப்பதாக ஆளுநர் முதலில் கூறினார். ஒருமுறை அவர் ஒப்புதலை நிறுத்திவைத்தால், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கும் கேள்விக்கே இடமில்லை. அவரால் முடியாது. ஒப்புதல் அளித்தல், நிறுத்தி வைத்தல் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தல் இந்த மூன்றில் ஒன்றை அவர் பின்பற்ற வேண்டும்.
எனவே முதலாவதும் முக்கியமானதுமான, ஒருவேளை ஒப்புதலை நிறுத்தி வைத்தால், அவரால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூற முடியாது. இரண்டாவதாக, ஒருவேளை ஒப்புதலை நிறுத்திவைத்தால், மசோதாவை அப்படியே வைத்து செயலிழக்க செய்ய முடியாது. அங்கேயே கிடப்பில் போட்டுவிட முடியாது. ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தியவுடன், அவருக்கு நான்காவது வாய்ப்பு வழங்கும் விதி இல்லை. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவிட்டு, அந்த மசோதாவை சட்டப்பேரவைக்கு திருப்பி அனுப்பவில்லை என்றால், ஆளுநர் "மசோதாவை முற்றிலுமாக முடக்கி உள்ளார்" என்றே அர்த்தம் என்றார்.
இதனிடையே வழக்கின் வாதங்களுக்கு பிறகு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறும் போது, இந்த பிரச்சினைக்கு ஆளுநர் தீர்வுகாண வேண்டும் என்று விரும்புகிறோம். முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தி முட்டுக்கட்டையை தீர்த்து வைத்தால் பாராட்டுவோம். ஆளுநர் முதலமைச்சரை அழைத்து இது குறித்து விவாதிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இதைத்தான் கேரளா விவகாரத்தில் நாங்கள் பரிந்துரைத்து இருந்தோம் என்றார். இந்த வழக்கின் விசாரணையை வருகிற நவம்பர் 11-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications