SC, ST மக்கள்தொகைக்கு ஏற்ப.. இடஒதுக்கீட்டையும் உயர்த்துங்கள்.. நாடாளுமன்றத்தில் திருமாவளவன் கோரிக்கை
டெல்லி: பட்டியல் சமூகம் மற்றும் பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர்களின் இட ஒதுக்கீட்டை உயர்த்துவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என நாடாளுமன்றத்தில் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் பேசியதாவது, "அகில இந்திய அளவில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்களும் பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர்களும் மக்கள் தொகையில் 25% அதிகரித்துள்ளனர். ஆனால் இன்னும் 15 சதவீதம் மட்டுமே பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கும் ஏழரை சதவீதமே பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மக்கள் தொகை அடிப்படையில் உயர்த்துவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று முதலில் வேண்டுகோளாக வைக்க நான் விரும்புகிறேன்.

அதே போல ஒவ்வொரு மாநிலத்திலும் பட்டியல் சமூகத்தைச் சார்ந்தவர்களையும் பழங்குடி சமூகத்தைச் சார்ந்தவர்களையும் இழிவாக அழைக்கும் தொனியில் பெயர்கள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இந்த நிலை நீடிக்கிறது. அதனை திருத்துவதற்கு மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை. பரிந்துரைப்பதற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. ஒன்றிய அரசு அந்த அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு அளிக்கக் கூடிய வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இந்த திருத்தம் இன்றியமையாத ஒன்றாக அந்தந்த சமூகத்தைச் சார்ந்த மக்களால் பார்க்கப்படுகிறது.
எனவே, இந்திய ஒன்றிய அரசு அந்தந்த மாநிலங்களில் இத்தகைய இழிவாக அழைக்கப்படுகிற தொனி உள்ள பெயர்கள் அனைத்தையும் மாநில அரசுகளே மாற்றுவதற்கு அதிகாரம் அளிக்கக்கூடிய வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டில் 74 சாதிகள் பட்டியல் சமூகத்தில் ((Scheduled Caste) உள்ளன. அதுல பின்வரும் சாதிகள் Nomadic Tribes பழங்குடியினத்துக்கான பண்பாட்டுக் கூறுகளை கொண்ட உடல் அமைப்புகளை கொண்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள், ஆயிரம் பேருக்கும் குறைவான சமூகங்களை சார்ந்தவர்கள, சில சமூகங்கள் நூற்றுக்கும் குறைவாக உள்ளன. பயிரா, பக்கூடா, சண்டி, எல்லாரா, தொம்பன், கொடகாளி, கொண்டா கோசாங்கி, கோலியா, ஜக்கார்டி, ஜம்புடு, கூசா, கொறவன், நாயாடி, வேடன், வேட்டுவன் இவ்வளவு சமூகங்களைச் சார்ந்தவர்கள் Microscopic Minorities என்று சொல்லக்கூடிய வகையில் ஒரு Negligible Minorities என்று சொல்லக்கூடிய வகையில் உள்ள சமூகங்கள்.
இவர்கள் இதே பட்டியலில் உள்ள பிற சாதியினரோடு பெரும்பான்மை சாதியினரோடு போட்டி போட்டு கல்வியை பெறுவதற்கோ வேலைவாய்ப்பை பெறுவதற்கோ வாய்ப்பு இல்லாத நிலை இருக்கிறது. எனவே, இவர்கள் அடிப்படையிலேயே anthropologicaly they are belonging to nomadic tribes. எனவே, இவர்களை பழங்குடியின சமூக பட்டியலில் இணைப்பதன் மூலம் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடம் பெறுவதற்கான ஒரு வாய்ப்பு அமையும்.
எனவே, மாண்புமிகு அமைச்சர் அவர்கள் இந்த சாதிகளைச் சார்ந்த அனைவரையும் எஸ்சி பட்டியலில் இருந்து எஸ்டி பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டு நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அவர்கள் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன். அந்தப் பகுதியில் உள்ள குரும்பன் சமூகத்தைச் சார்ந்தவர்களையும் லம்பாடி சமூகத்தைச் சார்ந்தவர்களையும் பழங்குடி பட்டியலில் இணைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை அமைச்சர்கள் எடுக்க வேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications