'இது மூடி மறைக்கப்படும் பச்சை படுகொலை'.. ஆக்சிஜன் பற்றாக்குறை மரணங்கள்... விளாசும் ராகுல் காந்தி
டெல்லி: குருகிராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்த வீடியோவை பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, அதை மூடி மறைக்கப்படும் படுகொலை என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பரவலின் 2ஆம் அலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது. கடந்த 10 நாட்களாகவே இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது.
மே 2ஆம் வாரத்தில் தான் கொரோனா பரவலின் 2ஆம் அலை இந்தியாவில் உச்சம் பெறும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்போது தினசரி வைரஸ் பாதிப்பு எட்டு லட்சம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு
டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக ஏற்பட்டுள்ளது. டெல்லி, ஹரித்துவார் போன்ற நகரங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறுகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தோல்வியடைந்துவிட்டதாக எழுத்தாளர் அருந்ததி ராய் உள்ளிட்ட பலரும் மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்,
|
பச்சை படுகொலை
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளார். குருகிராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழந்த வீடியோவை பகிர்ந்துள்ள அவர், "இது மூடி மறைக்கப்பட்ட படுகொலை, உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

தொடரும் ஆக்சிஜன் தட்டுப்பாடு மரணங்கள்
கடந்த வாரம் குருகிராம் பகுதியிலுள்ள ஒரு மருத்துவமனையில் இது நடந்துள்ளது. ஆக்சிஜன் தீர்ந்ததும் மருத்துவமனை ஊழியர்களும், மருத்துவர்கள் நோயாளிகளை காக்க எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும் நோயாளிகளை அப்படியே விட்டுவிட்டதாக நோயாளிகளின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். தமிழகத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்றிரவு 10க்கும் மேற்பட்ட நோயாளிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
|
சிதம்பரம் விமர்சனம்
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சிதம்பரம் விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், "இதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. தினசரி கொரோனா சோதனைகள் தொடர்ந்து குறைக்கப்படுகிறது.

மக்களை முட்டாளாக்கக் கூடாது
பரிசோதனை குறைக்கப்பட்டால் வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுவதும் குறையத் தான் செய்யும் ஒருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்றால் வைரஸ் தொற்றே கண்டுபிடிக்க முடியாது. அரசு பொதுமக்களை முட்டாளாக்கக் கூடாது. மத்திய அரசு தினசரி கொரோனா பரிசோதனையை உடனடியாக அதிகரிக்க வேண்டும்" என அவர் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications