ஜி 20 அமைச்சர்கள் கூட்டம்: எல்லை பிரச்னை குறித்து சீன அமைச்சரிடம் ஜெய்சங்கர் கலந்துரையாடல்
சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் எல்லை பிரச்னை விவாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெய்சங்கர் ட்வீட் செய்துள்ளார்
டெல்லி: ஜி 20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் எல்லை பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
நடப்பாண்டிற்கான ஜி 20 உச்சி மாநாடு இந்தியாவில் நடைபெற இருக்கிறது. சர்வதேச அளவில் சக்தி வாய்ந்த பொருளாதாரத்தை கொண்ட 20 நாடுகள் சார்பில் ஆண்டுதோறும் ஜி 20 மாநாடு நடைபெறும். இம்மாநாட்டை நடத்தும் பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டிடம் சுழற்சி முறையில் கொடுக்கப்படும். கடந்த ஆண்டு இம்மாநாட்டை இந்தோனேஷியா நடத்தியது. தற்போது இந்தியா நடத்துகிறது.
இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு முன்னோட்டமாக ஜி 20 வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த கூட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்த கூட்டத்தில் சர்வதேச அளவில் பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. காலை அமர்வில் ராஷ்டிரபதி பவன் கலாச்சார மையத்தில் ரஷ்யாவின் செர்ஜி லாவ்ரோவ், சீனாவின் கின் கேங் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோர் ஒன்று கூடி முதல்கட்ட விவாதங்களை மேற்கொண்டனர்.

ஜி 20
இதில் உக்ரைன் போர், ரஷ்யாவுக்கு சீனா ஆதரவு உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. மேலும், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சர்வதேச உறவுகளுக்கு சக நாடுகளின் பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து பிற்பகல் அமர்வில் இந்தியா-சீனா எல்லையில் நிலவும் பதற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. எல்லையில் அமைதியை ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே இருக்கும் சவால்கள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன.

சீன அமைச்சர்
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக கின் கேங் பொறுப்பேற்ற பின்னர் அவர் இந்தியா வந்திருப்பது இதுதான் முதல் முறையாகும். எனவே இந்த சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பகிர்ந்துள்ள டிவிட்டில், "பிற்பகல் நடைபெற்ற ஜி 20 கூட்டத்தில் சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்தேன். இருவரும் எல்லை பிரச்னை குறித்தும், அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட எதிர்கொள்ள உள்ள சவால்கள் குறித்தும் கலந்துரையாடினோம். அதேபோல ஜி 20 மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் குறித்தும் பேசினோம்" என்று கூறியுள்ளார்.

கால்வான் மோதல்
கடந்த 2020ம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் சம்பவத்தையாடுத்து அருணாச்சலப் பிரதேச எல்லையில் சீனா தனது கட்டமைப்பை அதிகரித்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் அதிகரித்து வருகிறது. எனவே இதற்கு தீர்வு காணும் வகையில் இந்த கலந்துரையாடல் அமைந்திருக்கிறது. சீன வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திப்பதற்கு முன்னர் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனை ஜெய்சங்கர் சந்தித்து பேசியுள்ளார். இதில் உக்ரைன்-ரஷ்யா மோதல், இந்தியா-அமெரிக்கா உறவுகள் மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

குவாட்
ஏற்கெனவே அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் ஏழாம் பொறுத்தம் இருக்கும் நிலையில், சீன அமைச்சரை சந்திப்பதற்கு முன்னர் அமெரிக்க அமைச்சரை ஜெய்சங்கர் சந்தித்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. இதன் மூலம் சீனாவுக்கு எதிராக புது வியூகம் வகுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. சீனாவுக்கு எதிராகதான் அமெரிக்கா குவாட் அமைப்பை உருவாக்கி வைத்துள்ளது. ஆசியாவில் அமெரிக்காவுக்கு நட்பு நடாக இந்தியா இருப்பதை இந்த அமைப்பு உறுதி செய்து வருகிறது. இதனை சீனா தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில், அமெரிக்காவும், இந்தியாவும் சீனாவுக்கு எதிராக கைக்கோர்க்கலாம் என்று சீனாவுக்கு ஒரு பக்கம் அச்சம் இருந்துக்கொண்டேதான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications