45 வயதை கடந்த... அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி.. கோவின் செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம்
டெல்லி: 45 வயதைக் கடந்த அனைவரும் தற்போது கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள கோவின் செயலியில் பதிவு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் சில பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள மரபணு மாறிய கொரோனாவும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றாததும் இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன், 45 வயதைக் கடந்த அனைவரும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், தடுப்பூசி எடுத்துக்கொள்ள கோவின் செயலியில் 45 வயதைக் கடந்தவர்கள் தற்போது பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தடுப்பூசி மையங்களில் பதிவு செய்யும் முறை ஏப்ரல் 1ஆம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்கும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5.8 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 6.11 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications