இந்தியாவில் 5ல் மூன்று பேர் உயிரிழக்கும் அபாயம்! அதிர்ச்சி கொடுத்த ஐசிஎம்ஆர்! இது ரொம்ப ஆபத்து ஆச்சே
டெல்லி: என்ன தான் இந்த காலத்தில் சயின்ஸும் மருத்துவமும் தொடர்ந்து வளர்ந்து வந்தாலும் கூட சில விஷயங்கள் பிரச்சினைக்குரிய ஒன்றாகவே தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே நமது நாட்டில் அடுத்த 20 ஆண்டுகளில் மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் மிகவும் ஆபத்தான ஒரு விஷயம் குறித்து ஐசிஎம்ஆர் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த காலத்தில் நமது வாழ்க்கை முறை வேகமாக மாறி வரும் சூழலில், இதனால் பல்வேறு உடல்நிலை பாதிப்புகளும் கூட ஏற்படுகிறது. இது சாதாரண மக்களுக்கு பெரும் சிரமத்தைக் கொடுப்பதாகவே இருக்கிறது.

கேன்சர்
அதில் குறிப்பாக கேன்சர் பாதிப்பைச் சொல்லலாம்.. முன்பு அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாக இருந்த கேன்சர் பாதிப்பு இப்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. அதற்கு வாழ்க்கை முறை மாற்றமே முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே கேன்சர் பாதிப்பு நமது நாட்டில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது குறித்து அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
5ல் மூவர் மரணம்
அதாவது நமது நாட்டில் கேன்சர் உறுதி செய்யப்படும் 5 பேரில் 3 பேர் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உயிரிழப்பு விகிதம் 60%ஆக உள்ளது. அதிலும் குறிப்பாக ஆண்களுடன் ஒப்பிடும்போது பெண்களிடையே கேன்சர் உயிரிழப்பு அதிகமாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கேன்சர் உயிரிழப்பு விகிதம் நான்கில் ஒன்று, அதாவது 25%ஆக மட்டுமே இருக்கிறது. சீனாவில் இரண்டில் ஒருவர், அதாவது கேன்சர் உயிரிழப்பு விகிதம் 50%ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐசிஎம்ஆர் அமைப்பு இது தொடர்பாக சில அச்சுறுத்தும் தகவல்களையும் பகிர்ந்துள்ளது. அதாவது தற்போதைய டேட்டாவின்படி சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகில் அதிக கேன்சர் நோயாளிகளைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. மேலும், உலகில் கேன்சர் தொடர்பான மரணங்கள் அதிகம் நடக்கும் நாடுகளிலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
20 ஆண்டுகளில் தொடர்ந்து உயரும்
அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவில் கேன்சர் தொடர்பான மரணங்கள் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ள ஐசிஎம்ஆர், அப்போது புற்றுநோய் இறப்புகளை நிர்வகிப்பதே சவாலாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், தொடர்ச்சியாக ஆண்டுக்கு இரண்டு சதவீதம் விகிதத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களிடையே பாதிப்பு அதிகம்
நமது நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் குறிப்பிட்ட 36 டைப் கேன்சர்கள் எப்படி பரவியுள்ளன என்பது குறித்து ஐசிஎம்ஆர் ஆய்வு செய்துள்ளது. இந்த ஆய்வில் தான் நமது நாட்டில் கேன்சரால் பாதிக்கப்படுவோரில் 5ல் மூவர் உயிரிழக்கும் அபாயத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் சுமார் 44% நோயாளிகளுக்கு ஐந்து வழக்கமான கேன்சர் தான் ஏற்பட்டுள்ளதாம்.
அதேநேரம் பெண்களுக்கு கேன்சர் பாதிப்பு சற்று அதிகமாகவே இருக்கிறதாம். குறிப்பாக நமது நாட்டில் மார்பக புற்றுநோய் என்பது மிகப் பெரிய பிரச்சினையாகத் தொடர்கிறது. பெண்களிடையே ஏற்படும் கேன்சர் பாதிப்புகளில் 13.8 சதவீதம் மார்பக புற்றுநோயாக உள்ளது. அதேநேரம் 9.2 சதவிகித பேருக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட கேன்சர்கள் பாதிப்புகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் அதில் இருந்து நாம் மீண்டு வந்துவிடலாம். எவ்வளவு தூரம் முன்கூட்டியே சிகிச்சையைத் தொடங்குகிறோமோ.. அந்தளவுக்கு நல்லது..! எனவே, ஆண்டுக்கு ஒரு முறை உரிய உடல் பரிசோதனை செய்து கொண்டாலே கேன்சர்களை முன்கூட்டியே கண்டறியலாம்.












Click it and Unblock the Notifications