மசோதா ஒப்புதலுக்கு கெடு.. ஜனாதிபதி கேள்விகளுக்கு மாநில அரசுகள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி: ஆர்என் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் மசோதா ஒப்புதலுக்கு ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் காலநிர்ணயம் செய்தது. இந்த காலக்கெடு குறித்து ஜனாதிபதி திரெளபதி முர்மு 14 கேள்விகள் எழுப்பி இருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளும் ஒரு வாரத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்என் ரவிக்கும் மோதல் போக்கு உள்ளது. குறிப்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்என் ரவி ஒப்புதல் அளிப்பது இல்லை எனவும், மசோதாக்களை கிடப்பில் போடுவதாகவும் ஆளும் திமுக அரசு கடுமையாக குற்றம்சாட்டியது.

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் யுஜிசி தலைவரையும் சேர்க்க கோரி இடையூறு ஏற்படுத்துகிறார் என்று தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் விசாரிக்கப்பட்டு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பார்திவாலா மற்றும் மகாதேவன் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
விசாரணையின் முடிவில் கடந்த 8 ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது தமிழக அரசு அனுப்பிய நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது. உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதல் வழங்கியது. அதுமட்டுமின்றி அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநர் மற்றும் ஜனாதிபதிக்கு கால நிர்ணயம் செய்தது.
அதன்படி மசோதாக்களுக்கு ஆளுநருக்கு ஒரு மாதம் வரையும், ஜனாதிபதிக்கு 3 மாதம் வரையும் கால நிர்ணயம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது தமிழக அரசுக்கு பாசிட்டிவ்வாக அமைந்தது. அதுமட்டுமின்றி நம் நாட்டில் பிற மாநிலங்களிலும் மசோதாக்களை நிலுவையில் வைக்க ஆளுநருக்கு செக் வைக்கப்பட்டத.
இந்நிலையில் தான் தமிழக ஆளுநர் விவகாரம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு தொடர்பாக ஜனாதிபதி திரெளபதி முர்வு விளக்கம் கேட்டார். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 143(1)ன்படி வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி முர்மு, உச்ச நீதிமன்றத்திடம் 14 கேள்விகளை எழுப்பினார். அதில் சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களைக் கையாள்வதில் பிரிவுகள் 200 மற்றும் 201ன் கீழ் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் என்ன? மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க அரசியல் சாசனத்தில் கால நிர்ணயம் இல்லாதபோது உச்சநீதிமன்றம் நிர்ணயிக்க முடியுமா? என்பது உள்பட 14 கேள்விகள் இடம்பெற்றுள்ளது.
ஜனாதிபதியின் 14 கேள்விகள் தொடர்பான விவகாரத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உள்பட 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று விசாரித்தது. இந்த அமர்வில் பி.ஆர். கவாயுடன், நீதிபதிகள் சூர்யா காந்த், விக்ரம் நாத், பி.எஸ். நரசிம்மா மற்றும் அதுல் எஸ். சந்துர்கர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இன்று காலை 11 மணிக்கு இந்த வழக்கு மீது விசாரணை நடைபெற்ற. அப்போது மசோதாக்கள் மீது முடிவெடுக்க வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி திரெளபதி முர்மு எழுப்பிய 14 கேள்விகள் தொடர்பாக மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் ஒரு வாரத்தில் கருத்து தெரிவிக்க வேண்டும் என்று அரசியல் சாசன அமர்வு அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கு ஒருவாரம் கழித்து வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications