"அருந்ததியர்களுக்கு உள்இடஒதுக்கீடு".. எதிர்த்து நிற்கும் திருமா! உச்சநீதிமன்றத்தில் பரபரப்பான மனு
டெல்லி: தமிழகத்தில் அருந்ததியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாளவவன் எம்பி சார்பில் சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2009ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி தலித்துகளுக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியர் பிரிவினருக்கு 3 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கினார். அதேபோல் பஞ்சாப், ஹரியானா மாநிலங்களிலும் தலித்களுக்கான இடஒதுக்கீட்டில் உள்இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதமின்றத்தில் 20 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பிரிவில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் ஆகஸ்ட் 1ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் பிஆர் கவாய், விக்ரம் நாத், பீலா திரிவேதி, பங்கஜ் மிட்டல், சதீஷ் சந்திர சர்மா, மனோஜ் மிஸ்ரா ஆகியோரின் அமர்வு தீர்ப்பு வழங்கியது. இதில் பீலா திரிவேதியை தவிர பிற 6 நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினர். பீலா திரிவேதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கினர்.
அதன்படி ஒரே தீர்ப்பு வழங்கிய 6 நீதிபதிகளும் பட்டியலினத்தவர்- பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டில் உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுகளுக்கு உரிமை உண்டு என கூறினர். மேலும் இந்த வழக்கில் ஓபிசி பிரிவினருக்கு இருக்கும் ‛கிரீமி லேயர்' போன்று எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டிலும் கொண்டு வர வேண்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
நீதிபதி பிஆர் கவாய் கூறுகையில், ‛‛பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினத்தவர் இடையே கிரீமி லேயர் முறையை உருவாக்கி தொடர்ந்து பலன் பெறுவதில் இருந்து விலக்கி வைக்க மாநில அரசுகள் புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டத்தின்படி உண்மையான சமத்துவத்தை அடைவதற்கு இந்த நடவடிக்கை அவசியம். இடஒதுக்கீடு மூலம் பயனடைந்த தனிநபர்களின் குழந்தைகளை, இல்லாதவர்களுடன் ஒப்பிடக் கூடாது'' என்றார்.
இந்த கருத்தை நீதிபதி விக்ரம் நாத் ஆதரித்ததோடு, கிரீமி லேயரை விலக்குவதற்கான அளவுகோல் என்பது ஓபிசிக்களுக்கு இருக்கும் நடைமுறையில் இருந்து மாறுபட்டதாக இருக்க வேண்டும் என்றார். அதேபோல் நீதிபதி பங்கஜ் மிட்டல் இடஒதுக்கீடு என்பது முதல் தலைமுறையினருக்கானதாக இருக்க வேண்டும். இடஒதுக்கீடு மூலம் முதல் தலைமுறையை சேர்ந்தவர் உயர்ந்த அந்தஸ்து பதவிக்கு செல்லும்போது அவரது அடுத்த தலைமுறை இடஒதுக்கீடு பலனை பெற கூடாது'' என்றார். நீதிபதி சதீஷ் சந்திர சர்மா, ‛‛எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கும் கிரீமி லேயர் முறையை கொண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிலையில் தான் அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் தீர்ப்பை எதிர்த்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உள் ஒதுக்கீடு வழங்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு இருப்பதாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இது இடஒதுக்கீட்டை உறுதி செய்யும் அரசியலமைப்பு சாசனத்தின் வரையறைக்கு எதிராக உள்ளது. மேலும் உள்ஒதுக்கீடு என்பது மக்கள்தொகையின் அடிப்படையில் வழங்க வேண்டும்.
ஆனால் பழங்குடியினர் பிரிவில் உள்ள பின்தங்கிய சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் உள்ஒதுக்கீடுக்கான வரம்பை நிர்ணயிப்பது பற்றி தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. மாறாக பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் கிரீமி லேயர் முறை இருப்பதை போல் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டிலும் கொண்டு வர வேண்டும். இதற்கான கொள்கைகளை உருவாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இத்தகைய உத்தரவு என்பது இயற்கை நீதிக்கு எதிரானது. இதனால் இதனை சீராய்வு செய்ய வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications