VB–G RAM G சட்டம்: நாடாளுமன்றத்தில் திருச்சி சிவா, வில்சன் உள்ளிட்ட எம்பிக்கள் விடிய விடிய தர்ணா!
டெல்லி: VB-G RAM G சட்டம் என பெயர் மாற்றப்பட்ட 100 நாள் வேலை உறுதி சட்டம் நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து திமுகவின் திருச்சி சிவா, வில்சன் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்தச் சட்ட முன்மொழிவு வலுக்கட்டாயமாக நிறைவேற்றப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர். இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

இந்தப் போராட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாகரிகா கோஷ், டெரெக் ஓ'பிரைன், சுஷ்மிதா தேவ், டோலா சென், மௌசம் நூர், பிரகாஷ் சிக் பரைக் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தியா கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுக்கு ஆதரவாக இப்போராட்டத்தில் இணைந்தனர்.
போராட்டக் களத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சாகரிகா கோஷ், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதை மகாத்மா காந்தியின் இரண்டாவது படுகொலை என்று வர்ணித்தார். காந்திக்கு 'மகாத்மா' என்ற பட்டத்தைச் சூட்டிய ரவீந்திரநாத் தாகூருக்கும் இது அவமதிப்பு என்றும் அவர் குறிப்பிட்டார்.
கோஷ் தொடர்ந்து பேசுகையில், "மோடி அரசு இந்த ஏழை-எளிய மக்கள், விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு எதிரான மசோதாவை 5 மணி நேர அறிவிப்பில் கொண்டு வந்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MNREGA) நீர்த்துப்போகச் செய்துள்ளது. இது இந்தியாவுக்கும், ஏழை மக்களுக்கும், மகாத்மா காந்திக்கும், ரவீந்திரநாத் தாகூருக்கும் இழைக்கப்பட்ட அவமானம்.
இந்த மசோதா குறித்து முறையான விவாதம் நடத்த எங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனை ஆய்வுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று கோரினோம். ஆனால், கொடுங்கோன்மையையும் ஜனநாயக விரோதப் போக்கையும் வெளிப்படுத்தி, இந்த அரசு மசோதாவை வலுக்கட்டாயமாக நிறைவேற்றியது. இதை எதிர்த்து நாங்கள் 12 மணி நேர தர்ணா நடத்துகிறோம்" என்று சாகரிகா கோஷ் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்த எதிர்க்கட்சியினர் கோஷங்களை எழுப்பியதுடன், காந்தியைக் கொன்றதுபோல MNREGA-வையும் கொல்லாதீர்கள் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் கையில் ஏந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்த மசோதா, மகாத்மா காந்தியை அவமதிப்பதாகவும், கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதங்களை பலவீனப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications