பிரதமர் மோடியுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு! நீட் தேர்வு விலக்கை நினைவூட்டி கோரிக்கை மனு அளிப்பு!
டெல்லி: செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டதற்காக பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
Recommended Video
அத்துடன் நீட் தேர்வு விலக்கு உட்பட தமிழகத்தின் உரிமை சார்ந்த பிரச்சனைகள் குறித்த கோரிக்கை மனுக்களையும் பிரதமரிடம் வழங்கி ஏற்கனவே அது தொடர்பாக முன் வைத்த கோரிக்கைகளை நினைவூட்டினார் ஸ்டாலின்.
முன்னதாக மாலை 4.30 மணிக்கு நடைபெறுவதாக இருந்த இந்தச் சந்திப்பு பிறகு 4 மணிக்கு என மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் ஸ்டாலின்
ஒரு நாள் பயணமாக நேற்றிரவு டெல்லி புறப்பட்டுச் சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு இல்லத்தில் ஓய்வெடுத்த அவர் மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொண்டமைக்காக தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

தமிழக பிரச்சனைகள்
மேலும், காவிரி நதி நீர் பங்கீடு, மேகதாது அணை, நீட் தேர்வு விலக்கு, என்.எல்.சியில் தமிழக இளைஞர்களுக்கு வேலை, மின்சார சட்டத் திருத்த மசோதாவால் ஏற்படும் பாதிப்பு, நிலுவையில் உள்ள நிதியை விடுவிப்பது என்பன உள்ளிட்ட இன்னும் பல முக்கியமான கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். குறிப்பாக ஏற்கனவே தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நீட் தேர்வு விலக்கை முதல்வர் ஸ்டாலின் இந்தச் சந்திப்பின் போது பிரதமருக்கும் மீண்டும் ஒரு முறை நினைவூட்டினார்.

ஸ்டாலினுக்கு பாராட்டு
இதனிடையே குறைந்த நாட்களில் சிறப்பான ஏற்பாடுகளை செய்து 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை எந்த குறையும் இல்லாமல் நடத்தியதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பாராட்டுத் தெரிவித்தார். அதேபோல் தொடக்க விழாவின் போது நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளையும் அவர் பாராட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. இவைகளை தவிர பரஸ்பர நலம் விசாரிப்பும் இந்தச் சந்திப்பின் போது நடைபெற்றிருக்கிறது.

சென்னை திரும்புதல்
குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகிய மூன்று பேருடனான சந்திப்பு இனிதே நிறைவுற்றதால் இன்று இரவே முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புகிறார். இதனிடையே அண்மையில் டெல்லி சென்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களான எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் பிரதமர் மோடி சந்திக்கவில்லை என்பதும் அவர்களுக்கு நேரம் ஒதுக்க முன்வரவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications