ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்பு.. சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு
டெல்லி:ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக, பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் உரிமம் 2018ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றாத காரணத்தால், உரிமத்தை நீட்டிப்பது தொடர்பான ஸ்டெர்லைட் ஆலையின் விண்ணப்பம் ஏப்ரல் 9ம் தேதி நிராகரிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து ஆலைக்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கடந்த மே 28-ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது.
தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவானது, நேரடியாக ஆய்வு செய்து பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
அதன் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க தமிழக அரசு அனுமதிக்க கடந்த 15 ஆம் தேதி உத்தரவிட்டனர். இந் நிலையில், ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாய அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.