நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்க முடியாது- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்
டெல்லி: நியூட்ரினோ திட்டத்தை அனுமதிக்கவே முடியாது; மேற்கு தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்புதான் முக்கியம் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
நியூட்ரினோ திட்டத்துக்கு சுற்றுச் சூழல் அனுமதி வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தேசிய புலிகள் பாதுகாப்பு வாரியம் இத்திட்டத்துக்கு அனுமதி வழங்கி இருந்தது.

இதனிடையே உச்சநீதிமன்றத்தின் இவ்வழக்கு விசாரணையின் போது தமிழக அரசின் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த வாதங்களின் போது, போடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி உலகப் பல்லுயிர் பெருக்கத்தில் மிக முக்கியத்துவமான இடம். புலிகள் சரணாலயாத்தையும் கம்பம் பள்ளத்தாக்கையும் இணைக்கக் கூடிய பகுதியாக உள்ளது.
சிறிய அளவிலான மனிதர்களின் அதிர்வுகள் கூட புலிகளின் நடமாட்டத்தை தவிர்க்கக் கூடியதாகிவிடும். மேற்கு தொடர்ச்சி மலைகளின் பாதுகாப்புதான் முக்கியம். ஆகையால் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்கவே முடியாது என திட்டவட்டமாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு நன்றி தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications