டூல்கிட் சர்ச்சை.. போலி தகவல்களை பரப்பும் பாஜகவினர் ட்விட்டர் கணக்கை முடக்க வேண்டும்.. காங். புகார்
டெல்லி: பிரதமர் மோடியின் பிம்பத்தைக் கெடுக்கத் தனியாக ஒரு டூல்கிட்-ஐ உருவாக்கப்பட்டுள்ளதாக பாஜக பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், இது தொடர்பாக ஜே பி நட்டா உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்கை முடக்க வேண்டும் எனப் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை ஏற்படுவதை மத்திய அரசு தடுத்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், நாட்டில் தற்போதுள்ள கொரோனா பாதிப்பைப் பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடியின் புகழைக் கெடுக்கக் காங்கிரஸ் முயல்வதாக பாஜக குற்றஞ்சாட்டியது,

மேலும், இதற்காகத் தனியாகவே ஒரு டூல்கிட்டையும் காங்கிரஸ் உருவாக்கி உள்ளதாக பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றஞ்சாட்டினார். மேலும், இந்தியாவின் நற்பெயரை வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுடன் இணைந்து கெடுக்க முயல்வதாகவும் அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

காங்கிரஸ் கட்சியின் டூல்கிட் என கூறப்படும் ஒன்றையும் சம்பித் பத்ரா தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். அதில் காங்கிரஸ் சின்னம் இடம் பெற்றுள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சியினர் 'இந்தியா வகை கொரோனா', 'மோடி வகை கொரோனா' போன்ற வார்த்தைகளை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை பாஜக தலைவர்கள் பலரும் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, காங்கிரஸ் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளனர். குறிப்பாக, பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, பாஜக முக்கிய தலைவர்களில் ஒருவரான சந்தோஷ் ஆகியோரும் இதைப் பகிர்ந்திருந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி குறித்துத் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருவதால் ஜே பி நட்டா, ஸ்மிருதி இராணி, சந்தோஷ், சம்பித் பத்ரா ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளை முடக்க வேண்டும் எனக் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது
முன்னதாக, நேற்று தான் காங்கிரஸ் கட்சியின் ஆராய்ச்சி பிரிவு மற்றும் மாணவர்கள் அமைப்பின் சார்பில் இது தொடர்பாகப் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications