சூப்பரேய்! பிளாட்பார்ம் டிக்கெட்டுக்கு ஜிஎஸ்டி கிடையாது.. விலை குறையப்போகுது.. ரயில் பயணிகள் ஹேப்பி!
டெல்லி: ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை, ஓய்வு அறை வசதி, காத்திருப்பு அறை கட்டணத்திற்கான ஜிஎஸ்டி வரி விலக்கிக் கொள்ளப்படும் என்ற நிதி அமைச்சரின் அறிவிப்பால் கோடிக்கணக்கான ரயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். ரயிலில் செல்பவர்கள் மட்டுமின்றி ரயிலில் பயணிக்கும் நண்பர்களையோ உறவினர்களையோ வழியனுப்பவோ, அழைத்து வரவோ செல்லும் மக்கள் வாயிலாகவும் ரயில்வே துறை பணம் சம்பாதிக்கிறது.

ரயில் நிலையத்திற்கு நாம் செல்வதற்கு பயண டிக்கெட் அல்லது பிளாட்பார்ம் டிக்கெட் எடுக்க வேண்டியது அவசியம். தற்போது இந்தியாவில் ரயில்வே பிளாட்பார்ம் டிக்கெட் விலை ரூ.10. பிளாட்பார்ம் டிக்கெட் 2 மணி நேரம் செல்லுபடியாகும். சம்பந்தப்பட்ட ஸ்டேஷனில் பயணச்சீட்டு இல்லாமல், பிளாட்பார்ம் டிக்கெட் கூட எடுக்காமல் இருந்தால், பிடிபட்டால் ரூ. 250 அபராதம் விதிக்கப்படும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிளாட்பார்ம் டிக்கெட் 5 ரூபாய் ஆகவே இருந்தது. கடந்த 2015ல் அதனை இரு மடங்காக உயர்த்தியது மத்திய அரசு. இதனால் தற்போது பிளாட்பார்ம் டிக்கெட் 10 ரூபாய்க்கு கிடைக்கிறது. சென்னையில் புறநகர் ரயில்களில் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்குச் செல்லவே 5 ரூபாய் தான் டிக்கெட். ஆனால் பிளாட்பாரம் டிக்கெட் எடுத்தால் 10 ரூபாய்.
இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற 53வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரிவிதிப்பு, இந்திய ரயில்வே வழங்கும் சேவைகளுக்கான வரி விலக்கு உள்ளிட்ட பல பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் சில நாட்களில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.
ஜிஎஸ்டி கூட்டத்திற்கு பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய நிர்மலா சீதாராமன், பிளாட்பார்ம் டிக்கெட் விற்பனை, ஓய்வு அறை வசதி, காத்திருப்பு அறைகள், ஆடை அறை சேவைகள், பேட்டரி மூலம் இயக்கப்படும் கார் சேவைகள் உள்ளிட்ட சாமானியர்களுக்கு இந்திய ரயில்வே வழங்கும் சேவைகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்திய ரயில்வேயின் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி வரி விலக்கிக் கொள்ளப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நிதியமைச்சரின் இந்த அறிவிப்பால், கோடிக்கணக்கான பயணிகளுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ரயில் பயணிகளின் சுமையை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவாக இது பார்க்கப்படுகிறது.
ரயில்வே பிளாட்ஃபாரம் டிக்கெட், ஓய்வு அறை வசதி, காத்திருப்பு அறை கட்டணங்களுக்கான ஜிஎஸ்டி வரி விலக்கப்பட்டுள்ளதால், இவற்றின் கட்டணம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கலின்போது இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக் கூடும் என்பதால் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications