இந்தியாவில் உள்ள இந்த 5 ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளிநாட்டுக்கே போகலாம்.. எதெல்லாம் பாருங்க
டெல்லி: ரயில் மூலமாகவே இந்தியாவில் இருந்து வெளிநாட்டிற்கு செல்ல முடியும் என எப்போதாவது நினைத்து பார்த்து இருக்கிறீர்களா.. அதெப்படி ரயிலில் வெளிநாட்டிற்கு செல்ல முடியும் என சிலர் நினைக்கலாம். இந்தியாவுடன் 7 நாடுகள் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இவற்றில் சில நாடுகளுக்கு ரயில் மூலமாகவே செல்லலாம். இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் ஐந்து ரயில் நிலையங்கள் பற்றிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.
வெளிநாடுகளுக்கு செல்வது என்றால் விமான நிலையம் சென்று புக் செய்து இருந்த விமானத்தை பிடித்து விரும்பிய நாடுகளுக்கு பயணிப்பார்கள். இலங்கை போன்ற நாடுகளுக்கு கப்பல் வழியாகவும் செல்லலாம். நேபாளம், பூடானுக்கு சாலை வழியாகவே செல்ல முடியும். சுற்றுலாப் பயணிகள் பலரும் இப்படி சாலை வழியாக பூடான், நேபாளம் சென்று அதை வீடியோவாக எடுத்து போட்டு இருப்பதை பார்த்து இருக்கிறோம்..
இந்தியாவில் இருந்து சில ரயில்கள் மூலமாகவும் வெளிநாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாடுகளை இணைக்கும் வகையில் உள்ள ஐந்து ரயில் நிலையங்களை பற்றித்தான் இங்கே பார்க்க இருக்கிறோம்.

ஹால்டிபாரி ரயில் நிலையம்:
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள இந்த ரயில் நிலையம் வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில் இருந்து வெறும் 4 கிலோ மீட்டர் தொலைவில் வங்கதேசம் உள்ளது. வங்கதேசத்தின் ஷில்ஹதி ரயில் நிலையத்திற்கு இங்கிருந்து ரயில்கள் செல்கின்றன. கடந்த 2020 டிசம்பர் முதல் ரயில்கள் இயக்கப்படுகின்றன. மிதாலி எக்ஸ்பிரஸ் ரயில் 2021 ஆம் ஆண்டில் இருந்து இயக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் உள்ள ஜல்பைகுரி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து டாக்காவிற்கு செல்கிறது. இந்த ரயில் ஹல்டிபாரி ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

ஜெயாநகர் ரயில் நிலையம்
பீகாரின் மதுபானி மாவட்டத்தில் உள்ளது ஜெயநகர் ரயில் நிலையம். இந்தியா - நேபாளம் எல்லையில் இருந்து வெறும் 4 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் நேபாளத்தின் ஜனக்பூரில் உள்ள குர்தா ரயில் நிலையத்தை இணைக்கிறது. இந்தியா - நேபாளம் இடையே பயணிகள் இந்த ரயிலில் எளிதாக பயணம் செய்ய முடியும். பாஸ்போர்ட் , விசா இன்றியே அனுமதிக்கப்படுகிறது.

சிங்காபாத் ரயில் நிலையம்:
மேற்கு வங்கத்தில் மல்டா மாவட்டத்தில் உள்ளது சிங்காபாத் ரயில் நிலையம். இந்த ரயில் நிலையத்தில் இருந்தும் வங்கதேசத்திற்கு ரயில்கள் செல்கின்றன. அதாவது, வங்கதேசத்திற்கு செல்லும் முன்பாக இந்தியாவிற்குள் உள்ள கடைசி ரயில் நிலையமாக சிங்காபாத் ரயில் நிலையம் உள்ளது. எனவே இருநாடுகளையும் இணைப்பதாக குறிப்பிடுகிறோம். இந்த ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயில்கள் செல்கின்றன. வங்கதேசத்தின் ரோஹன்புர் ரயில் நிலையம் வரை இயக்கப்படுகிறது.

பெட்ராபோல் ரயில் நிலையம்
மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பெட்ரபோல் ரயில் நிலையம் இந்தியாவின் பிசியான ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது. பந்தான் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் ரயில் நிலையம் இதுதான். கொல்கத்தாவில் இருந்து வங்கதேசத்தின் குல்னா வரை இந்த பந்தான் எக்ஸ்பிரஸ் ரயில் ஓடுகிறது. இந்த ரயில் நிலையம் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மிக முக்கியமானதாக உள்ளது. எனினும், இந்த ரயிலில் செல்ல வேண்டும் என்றால் பயணிகள் பாஸ்போர்ட், விசா வைத்து இருப்பது அவசியம்.

ரதிகாபூர் ரயில்வே நிலையம்
ரதிகாபூர் ரயில் நிலையம் மேற்கு வங்கத்தின் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ளது. இந்தியா - வங்கதேச எல்லையில் ஜீரோ பாயிண்டாக இந்த ரயில் நிலையம் உள்ளது. வங்கதேசத்தின் பிரல் ரயில் நிலையத்தை இந்த ரயில் நேரடியாக இணைக்கிறது. அசாம், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து சரக்குகள் கொண்டு செல்ல முக்கிய ரூட்டாக இது உள்ளது.












Click it and Unblock the Notifications