மத்திய அரசு பள்ளிகளில் தமிழ் புறக்கணிப்பு.. உடனே கல்வித்துறை அமைச்சரை சந்தித்த திருச்சி சிவா!
டெல்லி: மத்திய அரசின் கல்வித்துறை நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை நடத்தி வருகிறது. இந்த பள்ளிகளில் 1 முதல் 6 வரையில், மாநில மொழிகளைப் படிக்கலாம்.
ஆனால் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையில், விருப்பப் பாடமாக ஒரு மொழியைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த விருப்பப் பாடங்களுள் ஒன்றாக தமிழ் இருந்து வந்தது.
இந்த நிலையில் தமிழ் மொழியைத் தற்போது நீக்கி விட்டதாகவும், இந்தி, ஆங்கிலத்துடன், ஆறாம் வகுப்பில் இருந்து சமஸ்கிருதம்தான் விருப்பப் பாடம் என மாற்றியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

திருச்சி சிவா சந்திப்பு
ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ உள்பட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தி.மு.க மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா இந்த விவகாரம் தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை இன்று சந்தித்து பேசினார். இதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய திருச்சி சிவா கூறியதாவது:-

தமிழ் மொழி இல்லை
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பாடங்களைப் பதிவிறக்கம் செய்வதற்காக ஆன்லைனில் அனைத்து பாடப் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கின்றனர். அதில் தமிழ் மொழி இல்லை. ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடம் மட்டும்தான் இருக்கிறது. 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர், சமஸ்கிருதத்தில் தேர்ச்சி பெற்றால்தான் 7-ம் வகுப்புக்குச் செல்ல முடியும் என்று சமஸ்கிருதத்தைக் கட்டாயமாக்கியுள்ளனர். ஆனால் தாய்மொழியைப் படிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கடிதம் எழுதினார்
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழி பேசுபவர்களுக்கு வகுப்புகள், பாடப் பிரிவுகள் இருக்க வேண்டும் என்று ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியிருக்கிறேன். சபாநாயகர் வெங்கய்ய நாயுடு இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய கல்வித்துறையை வலியுறுத்தினார். கடந்த மார்ச் மாதம் கல்வித்துறை அமைச்சர் இதுகுறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்திருப்பதாக எனக்குக் கடிதம் எழுதினார்.

உறுதி அளித்தார்
ஆனால் உறுதி அளித்ததை மீறி தற்போது எல்லாம் நடந்து இருக்கிறது. இதனால் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானைச் சந்தித்தேன். அவர் உடனே கல்வித்துறைச் செயலாளரை வரவழைத்து அதுகுறித்துப் பேசினார். ''இது கொள்கை அளவிலான முடிவு. நிச்சயமாக நான் இதுகுறித்துப் பேசி, நல்ல முறையில் முடிவெடுக்கிறேன் என்றும் பிரதமர் உட்பட என்னைப் போன்ற அமைச்சர்கள் யாரும் மாநில மொழிகளுக்கு எதிரிகளில்லை என்றும் கல்வித்துறை அமைச்சர் என்னிடம் உறுதி அளித்தார். அதை நடைமுறையில் காட்டுமாறு நான் வலியுறுத்தினேன் என்று திருச்சி சிவா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications