அதிக லோடோடு வளைவில் திரும்பினால் இப்படித்தான் ஆகுமோ?.. இரண்டாக உடைந்த லாரி.. தீயாக பரவும் வீடியோ!
டெல்லி: அதிக லோடுடன் சென்றுகொண்டிருக்கும் லாரி ஒன்று வளைவில் திரும்பும் போது இரண்டாக உடைந்து விழும் காட்சி தற்போது இணையத்தில் வேகமாக பரவிக்கொண்டிருக்கிறது.
சரக்குகளை ஓர் இடத்தில் இருந்து ஓர் இடத்திற்கு கொண்டு செல்வதில் சரக்கு லாரிகளின் பணி இன்றியமையாதது.
இந்தியா போன்ற நாடுகளில் எல்லாம் நெடுஞ்சாலைகளில் நிமிடத்திற்கு நிமிடம் அணி அணியாக டிரக்குகள் செல்வதை காணலாம்.

அதிக லோடுடன் சென்றால்
அதீத சுமைகளை ஏற்றி செல்லும் இத்தகைய லாரிகள் விபத்துக்கு உள்ளாகும் அபாயமும் அதிகம். ஏனென்றால், அதீத வேகமாகவோ.. ஓவர் லோடுடனோ சென்றால் எளிதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் உண்டு. இதனால், சில சமயங்களில் கரப்பான் பூச்சி போல அப்படியே லாரிகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாவதை செய்திகளில் அவ்வப்போது நாம் பார்த்து இருக்கக்கூடும். டிரைவரின் கட்டுப்பாட்டை வாகனம் இழந்துவிட்டால் அடுத்து என்ன நடக்கும் என்பது கடவுளுக்கே வெளிச்சம்..

15 நொடிகள் ஓடும் வீடியோ
ஏனென்றால் அதன் டிரைவருக்கு கூட அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாது.. இதை மெய்பிக்கும் வகையிலான ஒரு விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. 15 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய அந்த வீடியோவில், வளைவான சாலை ஒன்று உள்ளது. கரடு முரடான இந்த சாலையில் இடது புறமாக இருவர் பேசிக்கொண்டு ஜாலியக சென்று கொண்டிருக்கின்றனர்.

இரண்டாக உடைந்த லாரி
அப்போது அவர்களுக்கு எதிர்திசையில் முழு லோடுடன் வேகமாக வந்து வளைவில் திரும்ப முயற்சிக்கிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அப்படியே வலது புறமாக சரிந்து சாலையில் விழுகிறது. விழுந்த வேகத்தில் லாரி இரண்டாக பிளந்து விடுகிறது. சரக்குகள் ஏற்றப்பட்டுள்ள மேல்பகுதி சாலையில் விழுந்து நொறுங்க டயர் மற்றும் ஆக்ஷல்கள் அடங்கிய பாகம் தறிகெட்டு ஓடுகிறது.

காயமின்றி தப்பிய டிரைவர்
ஆனால், இந்த பெரிய விபத்திலும் சிறு காயம் கூட இன்றி தப்பும் அதிர்ஷடக்கார டிரைவர், தறிகெட்டும் ஓடும் அந்த பாதி லாரியை துரத்தித்துக்கொண்டு ஓடுகிறார். மறுபக்கம் நடந்து சென்ற இருவரும் காயம் இன்றி தப்பி விடுகின்றனர். பதைபதைக்க வைக்கும் அதே நேரத்தில் சற்று நகைப்பையும் வரவழைக்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் டிரெண்ட் அடித்து வருகிறது. வீடியோ வெளியாகி இதுவரை 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும் கடந்துள்ளது.

நெட்டிசன்கள் கருத்து
நெட்டிசன்கள் பலரும் வீடியோவுக்கு கீழே தங்கள் கருத்துக்களை கமெண்டுகளாக போட்டு வருகின்றனர். நெட்டிசன் ஒருவர் இது கென்யாவில் நடைபெற்ற விபத்து என்று பதிவிட்டுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த இன்னொரு நெட்டிசன், லாரியின் ஓட்டுநரை பார்த்தால் சர்தார் போல தெரிகிறது. இதனால் இந்தியாவில் எங்கோ தான் இந்த விபத்து நடைபெற்று இருக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். சாலையில் கனரக வாகனங்களை கவனமாக ஓட்டாவிட்டால் என்ன நடக்கும் என்பதற்கு நல்ல உதாரணம் இது என்று மற்றொரு நெட்டிசன் பதிவிட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications