கரூரில் நடந்தது என்ன? தமிழக அரசு விரிவான அறிக்கை தர வேண்டும்.. கேட்கிறது மத்திய அரசு
டெல்லி: கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் முழு விவரங்களுடன் மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கோரி இருக்கிறது. கரூரில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், உயிரிழப்புக்கான காரணம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். இதில் 8 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 36 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இன்னும் 50க்கும் அதிகமானோர் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் உடனடியாக வரவழைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பிரச்சாரக் கூட்டத்தில் உயிரிழந்தவர்களின் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் அனுப்பும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் பலியானோருக்கு தலா ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் தமிழக அரசு சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் கரூர் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமானோர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் தனி நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கரூர் பெருந்துயர விவகாரம் தொடர்பாக முழுமையான விவரங்களுடன் மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தமிழக அரசு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கரூரில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், உயிரிழப்புக்கான காரணம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அமித்ஷா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கரூர் விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் பல்வேறு கட்சிகள் தரப்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications