மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பம்.. முதல்வரானார் தேவேந்திர பட்னவீஸ்.. துணை முதல்வர் அஜித் பவார்
Recommended Video
டெல்லி: மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக முதல்வராக தேவேந்திர பட்னவீஸ் பதவியேற்றார். இதையடுத்து துணை முதல்வர் அஜித் பவார் பதவியேற்றார்.
மகாராஷ்டிர சட்டசபைக்கான தேர்தலில் பாஜகவுக்கு 105 இடங்களும், சிவசேனாவுக்கு 56 இடங்களும் என்சிபிக்கு 54 இடங்களும் காங்கிரஸுக்கு 44 இடங்களும் கிடைத்தன. 288 இடங்களில் 146 இடங்கள் பெரும்பான்மைக்கு தேவை.
இந்த நிலையில் பாஜகவும் சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் முதல்வர் பதவியில் சிவசேனா கோரிக்கை வைத்ததால் பாஜக- சேனா கூட்டணி ஆட்சி அமையவில்லை. இதையடுத்து என்சிபி, காங்கிரஸுடன் இணைந்து ஆட்சி அமைய சிவசேனா முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

பேச்சுவார்த்தை
இந்த நிலையில் ஆட்சி அமைக்க ஆளுநர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தும் யாரும் அமைக்காததால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ். என்சிபி, சிவசேனா கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன.

ஆட்சி அமைக்க உரிமை
இந்த நிலையில் மும்பையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியது. இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறுகையில் மகாராஷ்டிராவில் புதிய அரசு உத்தவ் தாக்கரே தலைமையில் அமையும் என்றார். இதனைத் தொடர்ந்து மூன்று கட்சித் தலைவர்களும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க இன்று உரிமை கோர இருந்தனர்.
|
முதல்வர்
இந்த நிலையில் திடீர் திருப்பமாக மகாராஷ்டிரத்தில் பாஜக- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உருவானது. இதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் முதல்வராக தேவேந்திர பட்னவீஸ் முதல்வரானார். இதன் மூலம் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

ஆட்சி முடிவுக்கு வந்தது
துணை முதல்வராக அஜித் பவார் பதவியேற்றார். அவர்களுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பெரும்பான்மைக்கு 146 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜகவும் என்சிபியும் இணைந்து 159 இடங்களை பெற்றுள்ளதால் ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது. இதன் மூலம் மாநிலத்தில் 10 நாட்களாக நீடித்து வந்த குடியரசுத் தலைவர் ஆட்சி முடிவுக்கு வந்தது.












Click it and Unblock the Notifications