காஷ்மீரை தனிநாடாக காட்டிய ட்விட்டர்.. நிர்வாக இயக்குனர் மனிஷ் மகேஸ்வரி மீது பாய்ந்தது வழக்கு
டெல்லி: ட்விட்டர் தளத்தில் இந்தியா மேப்-இல் இருந்து பிரித்து காஷ்மீரை தனி நாடாகக் காட்டியது தொடர்பாக இந்தியாவின் ட்விட்டர் நிர்வாக இயக்குனர் மீது வழக்கு பாய்ந்துள்ளது. இனிடையே இந்த விவகாரத்தில் மத்திய அரசு கடும் கோபம் அடைந்த நிலையில், அந்த சர்ச்சைக்குரிய மேப்பை ட்விட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.
ட்விட்டரிலுள்ள உள்ள மேப் ஒன்றில் ஜம்மு & காஷ்மீர், லடாக் பகுதிகளை இந்தியாவின் ஒரு அங்கமாகக் காட்டாமல் வேறு ஒரு நாடாகக் காட்டியுள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பியது. ட்விட்டர் தளத்தில் Tweep Life என்ற செக்ஷனில் தான் ஜம்மு & காஷ்மீர் இப்படித் தனி நாடாகக் காட்டப்பட்டு இருந்தது.

இது ட்விட்ரில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ட்விட்டர் நிறுவனத்தின் இந்தச் செயலுக்கு எதிராகப் பலரும் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவிட்டனர். இதையடுத்து சர்ச்சைக்குரிய மேம்பபை ட்விட்டர் நிறுவனம் நீக்கி உள்ளது.
இதனிடையே ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர் மனிஷ் மகேஸ்வரியின் மீது, ஐபிசியின் பிரிவு 505 (2) மற்றும் ஐடி (திருத்தம்) சட்டம் 2008 இன் பிரிவு 74 ஆகியவற்றின் கீழ் இந்தியாவின் தவறான வரைபடத்தை தனது இணையதளத்தில் காட்டியதாக உத்தரப்பிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பஜ்ரங்தள நிர்வாகி அளித்த புகாரின் பேரில் புலந்த்ஷாஹர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ட்விட்டர் நிறுவனம் இந்தியாவின் மேப்-ஐ இப்படி தவறாகக் காட்டுவது இது ஒன்றும் முதல் முறை இல்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லடாக் யூனியன் பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதியாக ட்விட்டர் காட்டியது. இதனைக் கடுமையாகக் கண்டித்த மத்திய அரசு, இது தொடர்பாக ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்ஸிக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. அதன் பின்னரே ட்விட்டர் தனது தவறை சரி செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications